வாக்கிங்.. ஈட்டிங்... "அதுவும்"தான்... புதுச்சேரி ஹோட்டலில் எம்.எல்.ஏக்கள் என்ஜாயிங்!
காலையில் வாக்கிங்; பின்னர், சுவையான டிபன்; மதியம் வகை வகையான மீன் உணவுகளுடன் மது விருந்தெனப் புதுச்சேரி ஹோட்டலில் குதூகலமாக இருக்கிறார்கள் தமிழக எம்எல்ஏக்கள் என்று செய்திகள் படங்களோடு வைரலாகியுள்ளன.
சென்னை: புதுச்சேரி தனியார் ரிசார்ட் ஒன்றில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் காலையில் வாக்கிங் செல்வதில் தொடங்கி, விதவிதமான உணவு விருந்து உண்ணும் வரை அனைத்துப் படங்களும் செய்திகளும் வைரலாகியுள்ளன.
புதுச்சேரியில் சின்னவீராம்பட்டினம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் சொகுசு வாழ்க்கை குதூகலத்தில் இருக்கிறார்கள் என்று புதுச்சேரி அரசியல் வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் முதல்வர் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தலைமையிலான பிரிவுகள் இணைந்தன. ஓபிஎஸ் துணை முதல்வராகவும், அவரது தரப்பு எம்.எல்.ஏக்கள் அமைச்சராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர். இதற்கு டிடிவி தினகரன் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் முதல்வர் எடப்பாடி அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாகக் கூறி ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்தனர். பின்னர் அனைவரும் பாதுகாப்பு கருதி புதுச்சேரி சின்னவீராம்பட்டினத்தில் உள்ள தனியார் சொகுசு ரிசார்ட்டில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மீன், பிரியாணி விருந்து
இது குறித்து புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில், "நேற்று இரவு புதுச்சேரி ரிசார்ட்டிற்கு சென்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு பிரியாணி, மீன் வகைகள், நாண், பன்னீர் மசாலா என வகை வகையான சுவையான உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த உணவுகளையெல்லாம் ஒரு வெட்டு வெட்டினர் எம்எல்ஏக்கள்.
உயர்ரக மதுவகைகள்
மேலும் அசைவ உணவுகளுடன், விலை உயர்ந்த, ' ரெட் லேபிள், கிரீன் லேபிள்' ரக விஸ்கி மற்றும் , 17 அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்ட டின் பீர் ஆகியவை ரிசார்ட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
கடற்கரையில் வாக்கிங்
இன்று காலை ரிசார்ட்டிற்குள், கடற்கரையில், பாதுகாப்புடன் 19 எம்.எல்.ஏக்கள் குரூப்பாக வாக்கிங் சென்றுள்ளனர். அப்போது அவர்கள், ஊடகங்களுக்கு வெரைட்டியாக போஸ் கொடுத்துள்ளனர்.
சூடாகப் பொங்கல்
அவர்களுக்குக் காலை உணவாகத் தோசை, சப்பாத்தி, பிரெட்-ஆம்லேட், பொங்கல் உள்ளிட்டவை சூடாகப் பரிமாறப்பட்டன" என்று தெரிவித்தனர். இது தொடர்பான படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.