ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடும் பேராசியர் ஜெயராமன் குடும்பத்தோடு கைது!
திருவாரூர் அருகே ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவாரூர்: ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் விளைநிலங்களில் ஓஎன்ஜிசி குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேராசிரியர் ஜெயராமன் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டார்.
இதற்காக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல முறை கைது செய்யப்பட்டுள்ளார். கதிராமங்கலத்தில் நிலத்தடிநீரைப் பாதிக்கும் வகையில் செயல்படும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக கடந்த மே மாதம் முதல் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

திருச்சி சிறையில் அடைப்பு
கடந்த ஜூன் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் பதிலடி கொடுத்ததால் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பேராசியர் ஜெயராமனுக்கு ஜாமீன்
கைது செய்யப்பட்டவர்களுக்கு கீழமை நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தேசத்துரோக வழக்குப் பதிவு
இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் ஓஎன்ஜிசிக்கு எதிராக புத்தகம் எழுதியதாக ஜெயராமன் மீது தேசத்துரோக வழக்கப்பதிவு செய்யப்பட்டது. பேராசியர் ஜெயராமன் மீது தேசதுரோக வழக்கப்பதிவு செய்த தமிழக அரசுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

மனைவியுடன் கைது
இந்நிலையில் திருவாரூரில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டம் நடத்திய ஜெயராமன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயராமன், அவரது மனைவி சித்ரா உட்பட 4 பேரை நன்னிலம் போலீசார் கைது செய்துள்ளனர்.

போராட தூண்டியதாக வழக்கு
ஓஎன்ஜிசி மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்களை போராட தூண்டி வருவதாக ஜெயராமன் மீது நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த ஜூலையில் கைதாகி ஜாமினில் வந்துள்ள ஜெயராமன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications