மக்கள் கோபத்திற்குப் பயந்து நிகழ்ச்சிகளை ரத்து செய்யும் பாஜக தலைவர்கள்!
சென்னை: அனிதா தற்கொலை சம்பவத்தையடுத்து, அச்சம் காரணமாக, தமிழகத்தில் பாஜக தலைவர்கள் பங்கேற்கவிருந்த பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் அரியலூர் மாவட்ட மாணவி அனிதா. ஆனால் மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத்தரவில்லை. உச்சநீதிமன்றத்தில் திடீரென பல்டியடித்து நீட் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது மத்திய அரசு.
இதனால் டாக்டர் கனவுபறிபோன ஆதங்கத்தில், அனிதா, மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டார். தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கமலாலயத்தில் போலீஸ் குவிப்பு
இதனிடையே சென்னையிலுள்ள பாஜக தலைமை அலுவலகமாக கமலாலயத்தை மே 17 இயக்கத்தினர் முற்றுகையிட வருவதாக தகவல் வெளியானதால் பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அதிகரிப்பு
மே 17 இயக்கம் மட்டுமின்றி வேறு பல இயக்கங்களும், மாணவர் அமைப்புகளும், பாஜகவினருக்கும், ஆளும் அதிமுகவினருக்கு எதிராகவும் போராட்டங்களில் குதிக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதையடுத்து பாஜக தலைவர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் நிகழ்ச்சி ரத்து
இதனிடையே, தமிழகம் முழுக்க பாஜகவினர் பங்கேற்கவிருந்த பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யயப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனின் சென்னை, கோவை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவர் இன்று தமிழகம் வருவதாக இருந்த நிலையில், நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அச்சத்தால் ரத்து
அனிதா தற்கொலையால் பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்பு அச்சத்தால் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாஜக தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் போராட்டங்கள் நடைபெற்றால் அசாதாரண சூழ்நிலை நிலவும் என்பதால் அவை ரத்து செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications