மதுவிலக்கு சாத்தியமில்லை என்ற ஜெ. இப்போது மட்டும் எப்படிச் செய்வார்?- சுபவீ
கடலூர்: மதுவிலக்கு சாத்தியமில்லை என்று முன்பு சொன்ன ஜெயலலிதா, இப்போது படிப்படியாக அமலாக்கப்படும் என்பது ஏமாற்று வேலை என்றார் பேராசிரியர் சுப வீரபாண்டியன்.
கடலூர் தொகுதி திமுக வேட்பாளர் இள.புகழேந்தியை ஆதரித்து திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் கடலூர் புதுப்பாளையம், பாதிரிக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "ஜெயலலதாவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. சட்டமன்றத்தில் நத்தம் விஸ்வநாதன் மதுவிலக்கினை அமல்படுத்த மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்தார்.
கொஞ்சம், கொஞ்சமாவது குறைக்க நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேட்டார்.
மதுவால் ரூபாய் 30 ஆயிரம் கோடி வருவதை இழக்க முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால் இப்போது ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம் என்கிறார். இது மட்டும் எப்படிச் சாத்தியம்? இது திட்டமிட்டு ஏமாற்றும் வேலையல்லவா?
குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு செல்போன் என்கிறார். முதலில் பொது மக்களுக்கு கடந்த ஐந்தாண்டுகளாக ஒழுங்கான குடும்ப கார்டுகளை கொடுத்தாரா என்று பாருங்கள்," என்றார்.