காருக்குள் விபச்சாரம் செய்த 3 வெளிமாநில அழகிகள் மீட்பு: 2 புரோக்கர்கள் கைது
கோவை: கோவை அருகே காருக்குள் விபசாரத்தில் ஈடுபட்ட 3 வெளிமாநில அழகிகளை மீட்ட போலீசார் 2 புரோக்கர்களை கைது செய்தனர்.
கோவையை அடுத்துள்ளது சரவணம்பட்டி. இங்கு காருக்குள் வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிக்கு தகவல் வந்தது.
விபசார கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவு சரவணம்பட்டியில் உள்ள திருமண மண்டபம் அருகே ரோந்து வந்தனர். மண்டபத்தின் அருகே ஒரு கார் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தது.
சந்தேகமடைந்த போலீசார் காரின் அருகே சென்று பார்த்தனர். காருக்குள் 3 பெண்கள், 2 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்கள்.
எனவே போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணையை தொடர்ந்தனர். அப்போது அவர்கள் விபசார கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
காருக்குள் இருந்த 2 வாலிபர்களில் ஒருவர் விருதுநகரைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 25) என்பதும், மற்றொருவர் பெங்களூரைச் சேர்ந்த செந்தில் (34) என்பதும் தெரியவந்தது.
காரில் இருந்த பெண்களில் இருவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ரீமா (20), அனுஷா (23) ஆவார்கள். மற்றொருவர் கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த பத்மபிரியா என்று தெரியவந்தது.
வெளிமாநிலத்தில் இருந்து அழகிகளை அழைத்து வந்த புரோக்கர்கள் விபசாரத்தில் ஈடுபடுத்தி 1 மணி நேரத்துக்கு ரூ.3 ஆயிரம் வசூலித்துள்ளனர்.
அழகிகளை வைத்து பங்களாவில் விபசாரம் நடத்தினால் மாட்டிக்கொள்வோம் என நினைத்த அவர்கள் முக்கிய பிரமுகர்களுடன் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளனர்.
அவர்கள் சம்மதம் தெரிவித்ததும் அழகிகளை காரில் அழைத்துச்சென்று அவர்கள் கூறும் இடத்தில் கொண்டு விடுவார்கள். முக்கிய பிரமுகர்கள் அழகிகளை அழைத்துச் செல்வார்கள். குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் அழகிகளை புரோக்கர்கள் அழைத்து வருவார்களாம்.
இதனையடுத்து புரோக்கர்கள் விஜயகுமார், செந்தில் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அழகிகள் 3 பேரையும் மீட்டனர். மீட்கப்பட்ட 3 அழகிகளும் கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். புரோக்கர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம், கார், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த செல்போன்களில் கோவையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் செல்போன் எண்கள் உள்ளதால் கோவை மாவட்ட முக்கிய புள்ளிகள் கதிகலங்கி போயுள்ளனர்.
புரோக்கர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.