போயஸ் கார்டனில் ரெய்டு: பாதுகாப்பு வளையத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ்!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களின் வீடுகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை: போயஸ் கார்டனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களின் வீடுகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு சசிகலா குடும்பத்தினர் மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தூண்டுதலின் பெயரிலேயே ரெய்டு நடப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.