ஜல்லிக்கட்டு கோரி அலை அலையாய் போராட்டங்கள்.. கைகோர்க்கும் இளைஞர்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றுள்ளதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளதால் மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று நடைபெறுவது வழக்கம். ஆண்டாண்டு காலமாய் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை மிருகவதை எனக்கூறி உச்சநீதி மன்றம் தடைவிதித்துள்ளது.
இதனால் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் கைவிரித்தது. இதனால் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு விவகாரம் பூதாகரமாக உள்ளது.

சென்னையில் உண்ணாவிரதம்
சென்னையில் புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர் . சென்னை சேப்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வீரத்தோடு விளையாடதே
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதராவாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது தமிழர்களின வீரர்தோடு விளையாடதே என மத்திய அரசுக்கு எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் அவர்கள் முழக்கமிட்டனர்.

ஸ்தம்பித்த போக்குவரத்து
திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நத்தம் பள்ளப்பட்டி நான்கு வழிச்சாலையில் மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

புதுக்கோட்டையில் பேரணி
புதுக்கோட்டையில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு கண்டனம் தெரிவித்து பிரமாண்ட பேரணி நடத்தினர். தாராபுரத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காளைகளுடன் மறியல்
சேலம் மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் பூதாகரமாகியுள்ளது. ஆத்தூர் அருகே கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் காளைகளுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசுக்கு கோரிக்கை
நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலும் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

கண்களில் கறுப்புத்துணிக்கட்டி ஊர்வலம்
மதுரையில் மூன்றாவது நாளாக ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கண்களில் கறுப்புத்துணிக் கட்டிக்கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என முழக்கமிட்டு வருகின்றனர். அவர்கள் நகரின் பல முக்கிய பகுதிகளில் பேரணி நடத்தினர்.

மனிதச்சங்கிலி- ஆளுநார் மாளிகை முற்றுகை
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அம்மாநில இளைஞர்கள் மனிதச்சங்கிலியில் ஈடுபட்டனர். அப்போது ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர்.

காவலர்கள் திணறல்
திருவண்ணாமலை, தேனி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பல இடங்களில் போதுமான காவலர்கள் இல்லாததால் போராட்டத்தை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications