காவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு
காவிரி விவகாரத்தில் தடையை மீறி ஏப்ரல் 29ம் தேதி மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக வேல்முருகன் அறிவித்துள்ளார்.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வருகிற ஏப்ரல் 29ம் தேதி மெரினாவில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினர் முற்றுகையிட்டனர்.
அப்போது மக்களின் போராட்டங்களை கண்டுகொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், எந்த ஜனநாயகப் போராட்டங்களையும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், வருகிற ஏப்ரல் 29ம் தேதி சென்னை மெரினாவில் தடையை மீறி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி போராட்டம் நடத்தப்போவதாகவும் வேல்முருகன் அறிவித்துள்ளார்.