மதுரையில் போலீஸ் தடியடி.. 5 நாட்களுக்கு பின்பு கோவை - நாகர்கோவில் ரயில் மீட்பு
மதுரையில் சிறைபிடிக்கப்பட்ட ரயிலை 5 நாட்களுக்கு பின்பு போலீசார் மீட்டனர்.
மதுரை: ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை அடித்து மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து 5 நாட்களாக சிறைபிடிக்கப்பட்டிருந்த ரயில் மீட்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரையில் நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக செல்லூரில் ரயிலை மறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். செல்லூரில் தண்டவாளத்தில் அமர்ந்த மாணவர்கள் கோவையில் இருந்து நாகர்கோவில் சென்ற ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொது மக்கள் போராட்டத்தால் கடந்த 5 நாட்களாக, வைகை பாலத்தில் ரயில் சிறைபிடித்து வைக்கப்பட்டது.

அதை மீட்கும் முயற்சியில் போலீசார் தொடர் பேச்சு வார்த்த நடத்தி வந்தனர். ஆனால் போலீசாரின் சமரசத்தை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் ரயில் மறியல் போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை முதல் கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டு கொண்டனர். ஆனால் கலைந்து செல்லாததால் போலீசார் மாலை 5 மணியளவில் எச்சரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து முதலில் வைகை ஆற்றுக்குள் இருப்பவர்களை விரட்டி அடித்தனர்.
இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். கல் வீசி தாக்கினர். போலீசார் தொடர்ந்து தடியடி நடத்தினர். பின்னர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து 5 நாட்களாக பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் மதுரை ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே தமுக்கம் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications