காவிரி: முழு அடைப்பில் பங்கேற்காத ஓட்டல் சங்க தலைவர் பேக்கரி மீது கல்வீச்சு !
வேலூர்: தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர் வெங்கடசுப்புவின் பேக்கரி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய முழு அடைப்பில் ஓட்டல்கள் சங்கம் கலந்துகொள்ளாது என அறிவித்ததால் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்திற்கு தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., காங்கிரஸ், த.மா,கா. வி.சி.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன. அதிமுக மட்டும் இன்றைய போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
மேலும், விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள், பால்முகவர்கள் சங்கம், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர், திரையுலகினர் என பல்வேறு அமைப்புகளும் இன்றைய முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேன்றன.
ஆனால் இந்த போராட்டத்தில் தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் கலந்து கொள்ளாது என்று முன்பே அறிவித்திருந்தார் அந்த சங்கத்தின் தலைவர் வெங்கடசுப்பு.
இந்நிலையில், இன்றைய போராட்டத்தின் போது காட்பாடி பகுதியில் உள்ள வெங்கடசுப்புவுக்கு சொந்தமான டார்லிங் பேக்கரி மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. இன்றைய பந்தில் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் பங்கேற்காது என இவர் அறிவித்திருந்ததாலேயே இவரது கடை தாக்குதலுக்கு உள்ளானத கூறப்படுகிறது.