ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்: திமுகவுக்கு புதிய தமிழகம் ஆதரவு
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் என். ஆனந்த்தை ஆதரிப்பதாக புதிய தமிழகம் கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக, திமுக, பாஜக மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
அதிமுக வழக்கம் போல தனித்துப் போட்டியிடுகிறது. சில குட்டிக் கட்சிகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. திமுகவுக்கு இதுவரை பெரிய கட்சியின் ஆதரவு கிடைக்கவில்லை. காங்கிரஸ், தேமுதிகவின் ஆதரவை அது எதிர்பார்த்திருந்தது. ஆனால் இருவருமே இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை. அதேசமயம், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தங்களது வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்று பாஜக கூறி விட்டது.
காங்கிரஸ் தலைவர் மணிசங்கர அய்யர் இன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். ஈவிகேஎஸ் இளங்கோவனோ ஸ்ரீரங்கத்தில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்று கூறி விட்டார்.
மறுபக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோ, எங்களது ஆதரவை திமுக கேட்கவில்லை என்று கூறினார். மேலும் தாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் யாரையும் ஆதரிக்கவும் இல்லை என்றும் கூறி விட்டார்.
இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சி திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இன்று ஸ்ரீரங்கத்தில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிக்கிறது. திமுக வேட்பாளரின் வெற்றிக்காக புதிய தமிழகம் பாடுபடும் என்று தெரிவித்தார்.