ஜல்லிக்கட்டு வேண்டும்... மதுரையில் ரயில் மறியில்... தள்ளமுள்ளால் பரபரப்பு
ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டதை கண்டித்து மதுரையில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பீட்டா அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் முழக்கமிட்ட
மதுரை: ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டதை கண்டித்து மதுரையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனை காவல்துறையினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டாவது நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடந்த சில நாட்களாக தீவிரபோராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் பொங்கல் திருநாளான இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம்.
ஆனால் உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்துவிடக் கூடாது என்பதற்காக காவல்துறையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அலங்காநல்லூர் பகுதி பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மதுரையில் திரண்டு ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது பீட்டா அமைப்பை தடைசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்றதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
முன்னதாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை அவனியாபுரத்தில் இளைஞர்கள், விவசாயிகள் ஏராளமானோர் பேரணி நடத்தினர். அவனியாபுரத்தில் வாடிவாசல் முன்பு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேரணி தொடங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.












Click it and Unblock the Notifications