24 மணி நேரமும் சரக்கு விற்பனை.. கோவையில் மூடப்பட்ட டாஸ்மாக் அருகே பார் திறப்பு.. பொதுமக்கள் அச்சம்
இடையூறாக இருக்கும் டாஸ்மாக் பாரினை திறக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை: கோவையில் நீதிமன்றத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைக்கு அருகே சட்டவிரோதமாக பார் திறக்கப்பட்டு, அதில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். 24 மணி நேரமும் செயல்படுவதால் அப்பகுதி பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. நீதிமன்ற உத்தரவால் அந்த டாஸ்மாக் கடை மற்றும் பாரை கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மூடப்பட்டு இருந்தனர். இந்நிலையில் டாஸ்மாக் கடை தற்போது வரை மூடப்பட்டு இருக்கும் சூழலில், அதன் அருகே உள்ள பார் மட்டும் 24 மணி நேரமும் திறக்கபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
பாரில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வரும் காட்சிகளும் இடம் பெற்று உள்ளது. இந்த பாரின் அனைத்து நேரங்களிலும் திறந்து வைக்கப்படுவதால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், அருகேயே பள்ளி மற்றும் தொழிற்சாலைகள் இருப்பதால் மாலை நேரங்களில் குடித்து விட்டு சிலர் பெண்களிடம் தகராறில் ஈடுபடுவதாகவும் எனவே உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.