சாமி கும்பிடவந்த அமைச்சர் ஓ.பி.எஸ் வெள்ள சேதத்தை பார்வையிடவில்லை: சீர்காழி மக்கள் புகார்
சீர்காழி: சாமி கும்பிட வந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் வெள்ள பாதிப்புகளை பார்வையிடாமல் சென்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்களின் வாகனத்தை முற்றுகையிட முயன்றனர். இதனால் சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சென்னை. காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், நீர் நிலைகள் வேகமாக நிரம்பின. விடாது கொட்டித் தீர்த்த கனமழையினால் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்தது. இதனால் சென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதனால் பெரும்பாலானவர்களின் வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இதையடுத்து பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழுவும், அதிகாரிகளும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் நிவாரண பணிகள் சரிவர நடைபெறவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நிவாரண பணிகளில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக சீர்காழி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெருக்கெடுத்த வெள்ள நீர் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கனமழைக்கு 30 ஆயிரம் ஏக்கர் விளை நிலமும் பாளாகியது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான வைத்தீஸ்வரன் கோயிலுக்கு தமிழக அமைச்சர்கள் பன்னீர்செல்வம், ஜெயபால், சம்பத் மற்றும் எம்ஏக்கள் சிலர் சாமி கும்பிட வந்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து உடனடியாக அங்கிருந்து கிளம்பி சென்றனர். வெள்ளச் சேதத்தை அமைச்சர்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட மக்களுக்கு இதனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் அமைச்சர்களின் வாகனத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications