கட்டி 3 மாசம் கூட ஆகலை.. அதுக்குள்ள உடைஞ்சு மண்ணா போச்சே!
புதிதாக கட்டிய பாலம் சேதமாகிவிட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஈரோடு: "இந்த பாலம் கட்டி 3 மாசம் கூட முழுசா முடியல... அதுக்குள்ளே இப்படி எல்லாம் உடைஞ்சி மண்ணா போச்சு" என்கின்றனர் ஈரோடு கிராம மக்கள்.
நம்பியூர் அருகே உள்ளது அம்பேத்கர் காலனி. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் ஒரு ஓடை செல்கிறது. அந்த ஓடையில் தண்ணீர் இருந்தால் மாற்று பாதைகூட கிடையாது.
[ உத்திரமேரூர் கிராம சபை கூட்டத்தில் மக்களோடு மக்களாக பங்கேற்ற கமல்! ]
தார்சாலை
அதனால் ஓடையை கடக்க ஒரு பாலம் வேண்டும் என்று அந்த காலனி மக்கள் ரொம்ப காலமாகவே கேட்டுக் கொண்டிருந்தனர். ஒருவழியாக அந்த கோரிக்கை ஏற்கப்பட்டது. அதன்படி கடந்த 3 மாதத்திற்கு முன்பாக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் மற்றும் தார் சாலையும் அமைக்கப்பட்டது. அதாவது தார்சாலை அமைக்க 20 லட்சம் ரூபாயும், பாலத்திற்கு 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இவை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
உபரி நீர்
இந்த பாலம் வந்தவுடன் மக்களின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஆனால் அந்த மகிழ்ச்சியும் அவர்களுக்கு தங்கவில்லை. தற்போது நம்பியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் இருக்கும் ஏரிகள் எல்லாம் நிரம்பிவிட்ட நிலையில், அதன் உபரி நீர் இந்த காலனி இருக்கும் ஓடை வழியாக வந்துவிட்டது.
பொதுமக்கள் அதிர்ச்சி
மழை நீரின் வேகத்திற்கு, புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் இணைப்பு சாலைகள் மளமளவென இடிந்து விழுந்தது, அந்த நீரிலேயே அடித்துச் செல்லப்பட்டது. நீண்ட நாள் கோரிக்கைக்கு பின்னர் கட்டிக் கொடுக்கப்பட்ட பாலத்தின் இணைப்பு சாலை சேதமடைந்தது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சீரமைக்க வேண்டும்
"பாலம் கட்டி முழுசா 3 மாசம்கூட ஆகவில்லை, ஒரு மழைக்கே இப்படி ஆயிடுச்சே" என்று காலனி மக்கள் குமுறுகின்றனர். இதனால் தங்களுக்கு உடனடியாக பாலத்தை சீரமைத்து தர வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.