பாஜக கூட்டணி: 5 சீட் கேட்கும் புதிய நீதி கட்சி!
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் மதிமுகவுடன் புதிய நீதி கட்சி மல்லுக்கட்டிக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாரதிய ஜனதா தலைமையிலான அணியில் மதிமுக, புதிய நீதிக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. பாமக, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு வெளியாகவில்லை.
யார் யாருக்கு?
இந்த அணியில் மதிமுக விருதுநகர், ஈரோடு உள்ளிட்ட 9 தொகுதிகள்தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. புதிய நீதிக்கட்சிக்கு ஆரணி, இந்திய ஜனநாயகக் கட்சிக்கு பெரம்பலூர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு பொள்ளாச்சி எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரோட்டை கேட்கும் புதிய நீதி கட்சி
ஆனால் தற்போது மதிமுகவின் ஈரோடும் தங்களுக்குத்தான் வேண்டும் என்று புதிய நீதிக் கட்சி அடம்பிடிக்கத் தொடங்கியுள்ளதாம்.
5 தொகுதிகளில் 2 வேண்டும்
மொத்தம் 5 தொகுதிகளைக் குறிப்பிட்டு எப்படியும் 2 தொகுதிகளை வாங்கிவிடுவது என்பதில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் மும்முரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
4 லட்சம் செ.முதலியார்கள்
மேலும் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, குமாரபாளையம், மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் செங்குந்த முதலியார் சாதியினர் 4 லட்சம் பேர் இருக்கிறார்கள். அதனால் அது எங்களுக்கே தரப்பட வேண்டும் என்று வாதிடவும் செய்கிறாராம் சண்முகம்.
பேச்சே வேணாம்
மதிமுகவோ, ஈரோடு எம்.பி. கணேசமூர்த்திக்கு தான் மீண்டும் அங்க சீட்.. ஈரோடு பற்றிய பேச்சே வேண்டாம் என்று பாஜகவிடம் கறாராக சொல்லிவிட்டதாம். ஆனாலும் புதிய நீதிக்கட்சி அடம்பிடித்துக் கொண்டிருப்பதால் மதிமுக தலைவர்கள் உச்சகடுப்பில் இருக்கிறார்களாம்.
அதுசரி புதிய நீதிக்கட்சியே 5 தொகுதி கேட்கும்போது வைகோ ஏன் 9 உடன் நிற்க வேண்டும். தமிழகம், புதுவை, ஆந்திரா, தெலுங்கான என சேர்த்து 60 தொகுதிகளையாவது கேட்டாதான் மரியாதையாக இருக்கும்!












Click it and Unblock the Notifications