கிரண்பேடிக்கு வலுக்கிறது எதிர்ப்பு.. புதுவையில் இருந்து வெளியேறக் கோரி காங்கிரஸ் உண்ணாவிரதம்
புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புதுவையில் இருந்து வெளியேற வேண்டும் என்று கோரி காங்கிரஸ் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளது.
புதுவை; அதிகாரப் போட்டியின் உச்சத்தில் இருக்கிறது புதுவை மாநிலம். அங்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தனக்குத்தான் அதிகாரம் உள்ள என்ற போக்கில் பல வேலைகளை செய்து வருகிறார். இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
புதுச்சேரி சட்டமன்றத்துக்கு 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துக் கொள்ளலாம். இந்நிலையில், நியமன எம்.எல்.ஏ. பதவி இடங்களை நிரப்ப அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பரிந்துரை செய்தார்.
இதன்படி, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், கல்வியாளர் செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்து மத்திய அரசு அறிவித்தது.

பதவிப் பிரமாணம்
மத்திய அரசின் இந்த நடவடிக்கை புதுச்சேரி ஆளும் கட்சிக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில், நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முன்னிலையில் பதவிப் பிரமாணம் நிகழ்வு நடைபெற்றது.

முழு அடைப்பு போராட்டம்
நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து, புதுவையில் வருகிற 8-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் வரும் 11ம் தேதி முழு அடைப்பிற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

வழக்கு
இதற்கிடையே புதுவை சட்டசபைக்கு பாஜக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்ததற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதுபுறம் நீதியின் வாசலில் நின்றுக் கொண்டிருக்கிறது.

உண்ணாவிரதம்
இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியினர் கிரண்பேடியை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரண்பேடி புதுவையில் இருந்து வெளியேற வேண்டும் என்று அவர்கள் முழுக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் புதுவை மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம் உள்ளிட்ட தலைவர்கள் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications