குழந்தை பெற்று தர தகுதியில்லை.. தலையில் ஓங்கி அடித்து கணவன் கொடுமை.. வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை
புதுவை: குழந்தை பெற்றுத் தர முடியவில்லை , நீ எல்லாம் எதுக்கு என கேட்டு தன்னை கணவன் அடித்து துன்புறுத்தியதாக வீடியோவில் கூறிய பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி திருக்கனூரை அடுத்த கே.மணவேலி ரோஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் தனது அத்தை மகளான மோனிகாவை (23) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்கள்.
இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி தனது தாயை போனில் அழைத்த மோனிகா அழுது கொண்டே கணவரின் கொடுமைகளை கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், "குழந்தை பெற்றுக் கொள்ள தகுதியில்லாத நீ எதற்கு, உன் சாமானை எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்பு, நான் வேறு திருமணம் செய்து கொள்கிறேன்" என கூறி மோனிகாவை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் தனது தலையில் தாக்கியதால் தலை வலி தாங்க முடியவில்லை என கூறியுள்ளார்.
மேலும் முகத்தில் அடித்து முகமெல்லாம் வீங்கி போயுள்ளது என்றும் கூறியுள்ளார். இதை கேட்ட தாய், கவலைப்படாதேம்மா, நாங்கள் காலையில் வந்து பார்க்கிறோம் என கூறி சமாதானப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் மறுநாள் காலை மோனிகாவுக்கு அவருடைய தாய் போன் செய்துள்ளார். ஆனால் அவர் எடுக்கவில்லை.
சிறிது நேர இடைவெளியில் பல முறை போன் செய்த போதும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், அதே பகுதியில் வசித்து வரும் மோனிகாவின் அக்காவிடம் கூறி என்னவென பார்த்துவிட்டு வர சொல்லியுள்ளார். இதையடுத்து மோனிகாவின் வீட்டிற்கு அக்கா சென்ற போது வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது.
இதையடுத்து கதவை தட்டியுள்ளார். ஆனால் திறக்கவில்லை. இதனால் ஜன்னலில் எட்டி பார்த்த போது மோனிகா தனது திருமண புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலைக்கு முன்னதாக மோனிகா பதிவு செய்து வைத்திருந்த வீடியோவில் குழந்தை இல்லை என்பதற்காக கணவன் என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறான்.

தலையில் அடித்ததால் என்னால் தலைவலியை தாங்க முடியவில்லை. குழந்தை இல்லாததற்கு நான் என்ன செய்ய முடியும். என் மீதுதான் தவறா என அழுது கொண்டே பேசியுள்ளார். அத்துடன் போலீஸார் தற்கொலை கடிதத்தையும் பறிமுதல் செய்தனர். அதில் எனது இறப்புக்கு கணவர், அவரது அம்மா, அப்பா, தம்பி ஆகியோர்தான் காரணம். குழந்தை இல்லாததை சொல்லி சொல்லி என்னை டார்ச்சர் செய்தனர். யாரையும் சும்மா விடக் கூடாது. கணவரை போலீஸில் ஒப்படைக்க வேண்டும் என கூறியிருந்தார்.
வீடியோ, தற்கொலை கடிதத்தின் அடிப்படையில் போலீஸார் அரவிந்தை கைது செய்துள்ளனர். அது போல் பேத்தி மோனிகா இறந்த செய்தி கேட்ட அவருடைய பாட்டி மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார். குழந்தையின்மைக்காக கணவன் கொடுமை செய்த நிலையில் மனமுடைந்து மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications