ப்ளூவேல் விளையாட்டால் புதுவையில் தொடரும் பயங்கரம்... கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்
ப்ளூவேல் விளையாட்டில் ஈடுபட்ட இளம்பெண் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதுவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி: ப்ளூவேல் விளையாட்டால் புதுச்சேரியில் வங்கி ஊழியரான பிரியா என்ற இளம்பெண் கடலில் குதித்து தற்கொலை முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ப்ளூவேல் விளையாட்டில் சிக்கி புதுவை மாணவர் சசி ஹந்தா போரி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ப்ளூவேல் விளையாட்டில் ஈடுபட்ட பிரியா என்ற வங்கி ஊழியர் சக ஊழியர் ஒருவருக்கு அதிகாலையில் போன் செய்துள்ளார்.
அப்போது பிரியா முன்னுக்கு பின்னாக கூற அதிர்ந்து போன சக ஊழியர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பிரியா வீட்டுக்கு போலீஸ் சென்றது. ஆனால் அங்கு பிரியா இல்லை. போலீசார் வந்த பின்னரே அவரது உறவினர்களுக்கும் பிரியா வீட்டில் இல்லை என்ற தகவல் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தீவிரமாக தேடத் தொடங்கினார். அப்போது புதுவை கடற்கரையில் செல்போனுடன் பிரியா அமர்ந்திருந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடலில் குதித்து தற்கொலை செய்ய உட்கார்ந்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக புதுவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.