குடிபோதையில் மாணவர்கள் ரகளை – பெற்றோருடன் அனுப்பி வைத்த ஆசிரியர்கள்
புதுகை: புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் 15 பேர் மது போதையில் ரகளை செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறி பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் கீரமங்கலம் மட்டுமின்றி அருகில் உள்ள தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பல கிராமங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் விடுதிகளில் தங்கியும், தினசரி வீடுகளுக்கு சென்று வந்தும் படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் பள்ளியில் ஆண்டுவிழா நடந்தபோது அந்த பள்ளியில் படிக்கும் 15 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வெளியே ஒரு தைலமரக்காட்டில் நன்றா குடித்து விட்டு மது போதையில் மது பாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தகவல் அப்பகுதி பொதுமக்கள் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவந்தது. உடனே ஆசிரியர்கள் அந்த மாணவர்களை அழைத்து வந்து அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்து பார்த்தபோது அதில் மது போதையில் அவர்கள் ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டிருந்தது.
உடனே அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்த ஆசிரியர்கள் பெற்றோர்களிடமும் அந்த வீடியோவை போட்டு காட்டி பிள்ளைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். விரைவில் பொது தேர்வு நடக்க உள்ளது என்றும் அறிவுரை கூறியுள்ளனர்.
இது போல மாணவர்கள் சிறுவர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு வந்தால் அவர்களிடம் மது விற்பனை செய்வதை டாஸ்மாக் கடை ஊழியர்கள் நிறுத்த வேண்டும் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் கேட்டுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications