ஜல்லிக்கட்டு.. புதுவையிலும் வலுக்கிறது போராட்டம்.. சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல்
தொடர்கிறது மாணவர்கள் போராட்டம். ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்து புதுவை சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை: இந்தப் பொங்கலுக்கு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என்று கோரி புதுவை சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்னும் சில நாட்களில் வர உள்ள பொங்கல் திருவிழா. அப்போது ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் வலுத்து வருகிறது. சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரி மாணவர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து பேரணி, ஆர்ப்பாட்டம், போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று புதுவை மாநிலத்தில், ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்றக் கோரி புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினார்கள். சட்டக் கல்லூரி மாணவர்கள் புதுவை ரயில் நிலையத்தில் கூடி, புதுவை - திருப்பதி விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கட்டாய விடுமுறையிலிருந்து பொங்கல் பண்டிகையை நீக்கிய மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து புதுவை மாணவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதனையடுத்து அவர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications