வசதியான பெண்களை வளைப்பேன்...8 பேரை ஏமாற்றிய ப்ராடு புருஷோத்தமன் வாக்குமூலம்
8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பணம் மோசடி செய்தது எப்படி என்று போலீசில் புருஷோத்தமன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
Recommended Video
கோவை: தொழிலதிபர் போல நடித்து வசதியான பெண்களை வளைத்து போடுவேன் என்று சினிமா பாணியில் பல பெண்களை ஏமாற்றிய புருஷோத்தமன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் வெள்ளலூரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். முதல் மனைவியை இழந்த புருஷோத்தமனுக்கு 57 வயது ஆகிறது. 20 வயதில் கீதாஞ்சலி என்ற மகள் இருக்கிறார்.
இரண்டாவது திருமணம் என்ற பெயரில் இவர் பல பெண்களை ஏமாற்றி அவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டியுள்ளார்.
திருமண தகவல் மையம்
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் குமுத வள்ளி, கணவரை இழந்த இவர் காந்திபுரத்தில் உள்ள மெட்டி ஒலி திருமண தகவல் மையம் மூலமாக வெள்ளலூரை சேர்ந்த புருசோத்தமனை சந்தித்தார். புருஷோத்தமனுக்கு பெண்களை ஏமாற்றுவதுதான் பிரதான தொழில். இதற்கு திருமண தகவல் மையத்தினரும் உடந்தை.
மோசடிக்கு உடந்தை
குமுதவள்ளி உள்ளிட்ட 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் கோவை கிழக்குப்பகுதி மகளிர் போலீசார் புருஷோத்தமன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த காந்திபுரத்தை சேர்ந்த திருமண தகவல் மைய நிர்வாகிகள் மோகன், வனஜாகுமாரி ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
மோசடி மன்னன் புருஷோத்தமன்
திருச்சியில் தலைமறைவாக இருந்த புருஷோத்தமனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சபீதா, உஷாராணி, விமலா, இந்திராகாந்தி, சாந்தி, சித்ரா, குமுதவள்ளி, சுசிலா ஆகிய 8 பேரை புருஷோத்தமன் ஏமாற்றி திருமணம் செய்தது தெரிந்தது.
வங்கிக் கணக்கு முடக்கம்
புருஷோத்தமன் 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து ரூ.15 கோடி வரை மோசடி செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரது வங்கி கணக்கு, சொத்துகளை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெண்களை ஏமாற்றியது எப்படி என்று புருஷோத்தமன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மோசடி செய்தது எப்படி?
புருஷோத்தமன் தனது வாக்குமூலத்தில், நான் பெண் பார்க்க செல்லும் வீடு வசதியானதா என்பதை உறுதி செய்வேன். பெண்ணின் குடும்பத்தினரிடம் என்னை தொழிலதிபர் போல் காட்டிக்கொள்வேன். திருமண தகவல் மைய நிர்வாகிகள் மோகன், வனஜாகுமாரி என்னைப் பற்றி கூறுவதை நம்பி பெண் வீட்டினர் என்னை தொடர்பு கொள்வர்.
ஏமாற்றிவிட்டு எஸ்கேப்
பெண்ணை சந்தித்து அனுதாபம் ஏற்படுத்தும் வகையில் பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பேன். திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது போல் காட்டி பணம் கேட்டு டார்ச்சர் செய்வேன். அவர்களும் பணத்தை வாங்கி தருவர். பின்னர், நான் பணத்துடன் எஸ்கேப் ஆகிவிடுவேன் என போலீசில் கூறியுள்ளார். நான் அவனில்லை சினிமா பட பாணியில் வயதான நபர் ஒருவர் ஏராளமான பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.