'கிருஷ்ணசாமி கோரிக்கை சரி... ஆனால்?!' - தகிக்கும் தமிழிசை ஆதரவாளர்கள்
தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்குமாறு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்குமாறு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்து வருவது சரிதான். ஆனால் நாடார் சமூகத்தினரும் எஸ்.சி. பட்டியலில் இருந்து விட்டு பின்னர் பி.சி. பட்டியலுக்கு வந்தனர் என்று கூறுவதை ஏற்க முடியாது என்று தமிழிசையின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
தேவேந்திரகுல வேளாளர்களை எஸ்.சி பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பான பணிகள் வேகம் எடுத்து வருகின்றன. ' மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துவிட்டால், அவர்களை வேறு பட்டியலில் சேர்த்துவிடலாம். எம்.பி.சியில் சேர்த்தால் ராமதாஸ் கொதிக்கத் தொடங்கிவிடுவார் என்பதால் தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன' என்கின்றனர் புதிய தமிழகம் நிர்வாகிகள்.
பா.ஜ.க அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி. கடந்தாண்டு நீட் தேர்வுக்கு அரியலூர் மாணவி அனிதா பலியானபோது, அவருடைய மரணம் குறித்து கிருஷ்ணசாமி கூறிய வார்த்தைகள், பொதுவெளியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது செயல்பாடுகளை எதிர்க்கட்சிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கடுமையாகக் கண்டித்தனர்.

20 சதவீத இடஒதுக்கீடு
இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க பிரமுகர் ஒருவர், " கிருஷ்ணசாமியின் கோரிக்கை மீது மாநில அரசு சில முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. கிருஷ்ணசாமியின் கோரிக்கையை அந்த சமூகத்து மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது குறித்து மாவட்டவாரியாக கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடந்து வருகின்றன. இதன்பிறகு, மத்திய அரசுதான் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்.

மோதல்கள்
இவர்களை எம்.பி.சி பட்டியலில் சேர்த்தால், அந்த சமூகத்தினர் பயன்பெற்று வரும் 20 சதவீத இடஒதுக்கீட்டில் கைவைத்ததுபோல ஆகிவிடும். பெரும்பான்மையாக உள்ள தேவேந்திரகுல சமுதாயத்துக்கு, எம்.பி.சி. பட்டியலில் இடம் கொடுக்கப்படுவதை மருத்துவர் ராமதாஸ் விரும்பவில்லை. இதனால், தேவையற்ற மோதல்கள் ஏற்படும் என அரசுத் தரப்பில் நினைக்கின்றனர். அதனால், வேறு பிரிவுகளில் அவர்களை அமர்த்த முடியுமா என்ற ஆலோசனையும் நடந்து வருகிறது.

பி.சி. பட்டியல்
தேவேந்திரகுல வேளாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்காகப் போராடுவதில் தவறில்லை. அவர்கள் பனைமரம் ஏறும் சமுதாயத்தையும் குறிப்பிட்டு அரசியல் செய்கின்றனர். ' எஸ்.சி பட்டியலில் இருந்த நாடார்கள், பி.சி பட்டியலுக்குள் வந்துவிட்டார்கள்' எனப் பிரசாரம் செய்கின்றனர். இது தவறானது. நாடார் சமுதாயம் என்றைக்குமே எஸ்.சி பட்டியலில் இருந்ததில்லை. இடஒதுக்கீடு இல்லாத சமுதாயமாகத்தான் வைத்திருந்தனர்.

வேதனை அளிக்கிறது
63-ம் ஆண்டுதான் பி.சி. பட்டியலில் இடம்பிடித்தனர். இது தெரியாமல், எங்களை தலித் பட்டியலோடு தொடர்புபடுத்திப் பேசுவது வேதனையளிக்கிறது. தமிழிசையின் கவனத்துக்கும் இதைக் கொண்டு சென்றிருக்கிறோம். கிருஷ்ணசாமியின் கோரிக்கைகளின்பேரில், இறுதி முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கிறது" என்றார் விரிவாக.












Click it and Unblock the Notifications