"முதல்வர் வேட்பாளர்"... விஜயகாந்த்துக்காக பல்டி அடித்த மக்கள் நலக் கூட்டணி!
சென்னை: முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவிக்கவே மாட்டோம் என்று தொடர்ந்து கூறி வந்தது மக்கள் நலக் கூட்டணி. ஆனால் இன்று விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பல்டி அடித்துள்ளனர். இதன் மூலம் தனது கொள்கையில் முக்கியமான ஒன்றை அது கைவிட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் முதலில் உருவான கூட்டணி மக்கள் நலக் கூட்டணி. அந்தக் கூட்டணி உருவானபோது பலரும் அதைக் கிண்டலடித்தனர். பத்து நாள் கூட தாங்காது என்றனர். ஆனால் இந்த தலைவர்களோ படு கில்லாடிகளாக ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தனர்.
முதல் ஆளாக போய் விஜயகாந்த்தைப் பார்த்து கூட்டணிக்கு அழைத்தனர். ஆனால் ஆரம்பத்தில் பாஜகவுக்கும, திமுகவுக்கும் மட்டுமே விஜயகாந்த் தரப்பு முக்கியத்துவம் தந்து வந்ததாக கூறப்பட்டதால் மக்கள் நலக் கூட்டணி தனது வேலையில் தீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்தது.
உருவானது கூட்டணி
இந்த நிலையில் தற்போது மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. அந்தக் கட்சிக்கு 124 இடங்களையும் மக்கள் நலக் கூட்டணி ஒதுக்கியுள்ளது. மக்கள் நலக் கூட்டணி மொத்தமாக 110 தொகுதிகளில் போட்டியிடப் போகிறது.
முதல்வர் வேட்பாளர்
மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த்தை அறிவித்துள்ளனர். இது மக்கள் நலக் கூட்டணியின் பெரும் சறுக்கலாக பார்க்கப்படுகிறது.
பல்டி
ஆரம்பத்திலிருந்தே எங்களது கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளரை நாங்கள் அறிவிக்க மாட்டோம் என்று கூறி வந்தனர் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள். நாங்கள் டேக் ஆப் ஆகிவிட்டோம். இனி எங்கள் அணியில் தான் யாரும் வந்து சேர வேண்டுமே தவிர, நாங்கள் போய் சேர முடியாது என்றனர். ஆனால் இப்போது பல்டி அடித்துள்ளனர்.
கொள்கையைக் கை விட்டது
முதல்வர் வேட்பாளராக யாரையும் அறிவிக்க மாட்டோம் என்பதை கிட்டத்தட்ட இதை ஒரு கொள்கையாக வைத்திருந்தது மக்கள் நலக் கூட்டணி. இதனால் தான் வைகோ முதல்வர் வேட்பாளர் என்ற மதிமுகவினரின் பேச்சுக்களை வைகோ தடுத்தார். அதே போல தலித் முதல்வராக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் சில நிர்வாகிகள் கருத்துத் தெரிவித்தபோது அதை திருமாவளவனை வைத்தே தடுத்தனர் மக்கள் நலக் கூட்டணியின் பிற தலைவர்கள். ஆனால் இப்போது தேமுதிகவுக்காக தனது கொள்கையைத் தூக்கிப் போட்டு விட்டது மக்கள் நலக் கூட்டணி.
விஜயகாந்த்தை சந்தோஷப்படுத்த
முதல்வர் பதவியைத்தான் விஜயகாந்த் முக்கியமாக நினைக்கிறார் என்பதால், அவரை குஷிப்படுத்தவும், சந்தோஷப்படுத்தவும், அவரை கூட்டணிக்குள் இழுக்க வேறு வழியே இல்லாததாலும், முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் என்று சொல்ல மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் முன்வந்ததாக கூறப்படுகிறது.
"கிங்" ஆவாரா?
இப்படி ஒரு வழியாக ஒரு கூட்டணியில் நுழைந்து விட்டார் விஜயகாந்த். கிங் ஆக வேண்டும என்ற அவரது ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.