இன்று முதல் இது ''கேப்டன் விஜயகாந்த்'' கூட்டணி: வைகோ
சென்னை: மக்கள் நலக்கூட்டணியும் தேமுதிகவும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து இந்த கூட்டணி கேப்டன் விஜயகாந்த் அணி என்று அறிவிக்கப்படும் என்று மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியுள்ளார். விஜயகாந்த் அணிக்கும் அதிமுகவிற்கும் இடையேதான் இனி நேரடிப் போட்டி என்றும் வைகோ கூறியுள்ளார்.
வைகோ, திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட தலைவர் இன்று காலையில் தே.மு.தி.க கட்சித் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தை சந்தித்துப் பேசினர். அப்போது மக்கள் நலக்கூட்டணிக்கும், தேமுதிகவிற்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வைகோ, மக்கள் நலக்கூட்டணி என்ற சொல்கிறீர்களே, தேமுதிக என்று சொல்கிறீர்களே இதில் எதை எடுத்துக்கொள்வது என்று கேட்கிறீர்களா? இந்த அணி இனி கேப்டன் விஜயகாந்த் அணி என்று அழைக்கப்படும் என்றார்.
எங்களின் கூட்டணியைப் பார்த்து இரண்டு எதிரிகளின் கூடாரமும் கதிகலங்கிப் போயுள்ளது. தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம். மே மாதம் விஜயகாந்த் முதல்வராக பதவியேற்பார். தமிழகத்தில் முதன்முறையாக கூட்டணி ஆட்சி அமையும் என்றும் வைகோ தெரிவித்தார்.
மக்கள் நலக்கூட்டணிக்கு மட்டுமல்ல தேமுதிகவிற்கும் என்னை ஒருங்கிணைப்பாளராக அறிவித்து விட்டார் விஜயகாந்த்.
அகில இந்தியாவே எங்களை கவனிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எங்களை கவனிக்கின்றனர். 1967ம் ஆண்டு நடந்த சம்பவம் போல மீண்டும் நிகழும்.
இது மக்கள் நலக்கூட்டணி, இது மகத்தான கூட்டணி, இது மாபெரும் கூட்டணி இந்தக்கூட்டணி நிச்சயம் வெல்லும்.
இந்தக் கூட்டணி வென்றால் கூட்டணி ஆட்சி என்று சொல்லலாமா என்று கேப்டனிடம் கேட்டேன்.. ஓ... தாராளமா என்று சொல்லிவிட்டார். இதனால் இந்தக் கூட்டணி வென்று கேப்டன் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications