விஜயகாந்த் தலைமையிலான கூட்டணியில் ம.ந. கூட்டணி ஐக்கியமாகுமா? திருமாவளவன் விளக்கம்
சென்னை: விஜயகாந்த் தலைமையிலான கூட்டணியில் இணைய அழைப்புவிடுக்கப்பட்டால் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து முடிவு அறிவிப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் தேமுதிக என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னையில் நேற்று நடைபெற்ற தேமுதிக மகளிரணி கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம் என அறிவித்தார்.

அவர் பேசி முடித்த பின்னர் மைக் பிடித்த பிரேமலதா, விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் வரலாம்; அதிமுக, திமுகவுக்கு மாற்று தேவை என விரும்பும் கட்சிகள் வந்து பேசலாம் என அழைப்பு விடுத்தார். அதாவது விஜயகாந் தலைமையில் ஒரு புதிய கூட்டணி அமைக்கப்படும் என்பதைத்தான் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இதனால் விஜயகாந்த் தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா அல்லது மக்கள் நலக் கூட்டணி இணைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது:
விஜயகாந்த் பேரம் பேசிவருவதாக வெளியான விமர்சனங்கள், அவதூறுகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவரது இந்த முடிவை வரவேற்கிறேன்.
விஜயகாந்த் பேசுகையில் தனித்துப் போட்டி என்பதோடு முடித்து கொண்டார். ஆனால் அவரது மனைவி பிரேமலதா பேசிய போது, விஜயகாந்த் தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இந்த முடிவால் மக்கள் நலக் கூட்டணிக்கு பாதிப்போ, அதிர்ச்சியோ இல்லை. தற்போதைய நிலையில் விஜயகாந்த் தலைமையிலான கூட்டணியில் இணைய வெளிப்படையாக மக்கள் நலக் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
அப்படி ஒரு அழைப்பு விடுக்கப்பட்டால் மக்கள் நலக் கூட்டணியின் 4 தலைவர்களும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம். விஜயகாந்த்தின் அடுத்த கட்ட நகர்வுகளை ஆய்வு செய்து முடிவு அறிவிப்போம்.
மேலும் விஜயகாந்த் தலைமையிலான கூட்டணியில் மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் இணையும் போது அவரை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பது குறித்தும் பரிசீலித்து முடிவெடுப்போம்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications