தரமான சாப்பாடு! தரச்சான்று பெற்ற முதல் அரசு மருத்துவமனை.. தமிழ்நாடு கெத்து
தமிழ்நாடு: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வரும் உணவகத்திற்கு மத்திய அரசின் Eat Right Campus சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
இந்திய அளவில் அரசு மருத்துவமனைகள் மிகச் சிறப்பாக இயங்கிவரும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னோடியாக இருக்கிறது. இந்திய அளவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை முதன்முறையாக நடைமுறை செய்தது தமிழகம்தான். அதேபோல் அரசு காப்பிட்டு மூலம் இலவச அறுவை சிகிச்சைக்கு விதைப் போட்டதும் நமது மாநிலம்தான்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அமைந்துள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில்தான் ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை அமைந்துள்ளது . இது ஆசியாவின் மிகப்பெரிய பொது மருத்துவமனையாகும். இம்மருத்துவமனையில் 23 வகையான பிரிவுகள் இயங்கி வருகின்றன. மொத்தம் எட்டு மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிட பணிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு சுமார் 1014.5 மில்லியன் செலவில் பணிகள் தொடங்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டு மக்களின் பயன்பாட்டுக்காக இது திறந்து வைக்கப்பட்டது.
இங்கே ஒருநாளைக்கு சுமார் 12 ஆயிரம் பேர் பிறநோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர் என 2013 ஆம் ஆண்டு வெளியான கணக்கெடுப்பின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2013 இல், மருத்துவமனையில் ரூ 10 மில்லியன் செலவில் 12 இயந்திரங்களைக் கொண்ட புதிய சிறுநீரக டயாலிசிஸ் மையம் தொடங்கப்பட்டது.

கடந்த 2012 ஆம் ஆண்டு கணக்கின்படி இம்மருத்துவமனை 1000 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்து சாதனை புரிந்துள்ளது. இந்தியாவிலேயே இது மிக அதிக எண்ணிக்கையாகும். இங்கே உள் நோயாளியாகச் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்காக மொத்தம் 3,500 படுக்கைகள் இயங்கிவருகின்றன. இங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சையுடன் இலவசமான உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இது இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரியாக இருந்த வந்த நிலையில், இப்போது இம்மருத்துவமனையில் வழங்கப்படும் உணவுகளின் தரம் மிகச் சிறப்பாக இருப்பதற்காக இங்குள்ள கேண்டீன் Eat Right Campus சான்றிதழைப் பெற்றுள்ளது.

ஒரு அரசு மருத்துவமனை உணவகம் இந்தச் சான்றிதழைப் பெறுவது இதுவே முதல்முறையாகும். நாடு முழுவதும் உணவகங்கள், ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் பற்றி ஆய்வு செய்துவரும் மத்திய அரசின் உணவுத் துறை இந்தச் சான்றிதழை வழங்குவது வழக்கம்.
அப்படி ஒரு தரச்சான்றிதழ் தமிழ்நாடு ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளதை நோயாளிகள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த உணவகத்தில் காலை உணவாகச் சத்து மாவு, நொய் மற்றும் அரிசி மாவு கஞ்சி, பொங்கல், சாம்பார், ரவா மற்றும் அரிசி உப்புமா, அவித்த சுண்டல், வேர்க்கடலை, வடை, கீரை என்று தினம் 10 வகையான உணவுகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. உப்பில்லாத வெங்காய சட்னிகூட அளிக்கப்படுகிறது.

தினமும் என்ன உணவுகள் பரிமாறப்படுகின்றன என்பதை அங்குள்ள அட்டவணையில் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டும் வருகிறது. மிகத் தரமான முறையில் இங்கே வழங்கப்படும் உணவுகள் இருப்பதாக இங்கே பசியாறும் மக்களே சொல்கிறார்கள்.
இது குறித்துப் பேசிய அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணிராஜன், "இந்த உணவு சான்றிதழ் என்பது ஒருநாள் பார்த்துவிட்டு வழங்கப்படுவது இல்லை. தரமான உணவைச் சரியாக தருகிறார்களா? சமையல் கூடம் தரமாக மற்றும் சுகாதாரமாக இருக்கிறதா? அதைத் தொடர்ந்து சிறப்பாக நிர்வகிக்கிறார்களா? அங்கே பணியாற்றும் நபர்கள் சுகாதாரமாக இருக்கிறார்களா? எனத் தொடர்ந்து கண்காணித்த பிறகே இந்தச் சான்றிதழ்களை அளிப்பார்கள்.
தினமும் செய்யப்படும் சோதனைகளின் அடிப்படையில் 90 மதிப்பெண் எந்த உணவகம் பெறுகிறதோ அதற்கு மட்டுமே Eat Right Campus சான்றிதழை அரசு அளிக்கும். இதை மத்திய அரசின் Food Safety System Certification தான் வழங்கும். அந்தளவுக்குச் சிறப்பாகச் செயல்பட்டு எங்கள் மருத்துவமனை இச்சான்றிதழைப் பெற்றுள்ளது எங்களுக்கு மட்டும் அல்ல; இங்கே நோயாளிகளாகப் பயன்பெற்று வரும் மக்களுக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும்" என்கிறார்.
இந்தச் சான்றிதழ் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் கலாராணி, "தினமும் 2500 நோயாளிகளுக்கு உணவு அளித்து வருகிறோம். சர்க்கரை வியாதி, இதய நோயாளிகள் என விதவிதமான புறநோயாளிகள் தினமும் இங்கே பசியாறிச் செல்கின்றனர். அரசே என்ன மாதிரியான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளைத் தரவேண்டும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், நோயாளிகளின் உடல் ஆரோக்கியத்திற்கு ஒத்துவரும்படியான உணவு வகைகளைத் தேர்வு செய்து அளித்து வருகிறோம்" என்கிறார்.












Click it and Unblock the Notifications