அரசு பேருந்து கண்டக்டர்கள் பேருந்து நிலையத்தில் கட்டி புரண்டு சண்டை
திருநெல்வேலி: பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தின் கண்டக்டர்கள் இரண்டு பேர் கட்டிப்புரண்டு சண்டை போட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, மதுரை பேருந்துகள் செல்லும் வழித்தடத்தில் நேற்று காலையில் நெல்லை போக்குவரத்து கோட்டத்தைச் சேர்ந்த பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது நெல்லையில் இருந்து மதுரை வழியாக திருச்சி செல்லும் அரசு பேருந்தும் அங்கு வந்தது. அப்போது பயணிகளை ஏற்றுவதில் 2 பஸ்களின் கண்டக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி நெல்லை பஸ் கண்டக்டர் பாலசுப்பிரமணியன், திருச்சி பஸ் கண்டக்டர் அண்ணாமலையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பேருந்துநிலையத்தில் இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோதலில் ஈடுபட்ட 2 கண்டக்டர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.