ஆர்.கே. நகரில் மொத்தம் 62 வேட்பாளர்கள்… வேட்புமனு வாபஸ் முடிந்து இறுதிப் பட்டியல் வெளியீடு
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, தேர்தல் களத்தில் 62 வேட்பாளர்கள் உள்ளனர்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை தாக்கல் செய்த 8 சுயேட்சைகள் இன்று வாபஸ் பெற்றனர். இதனையடுத்து தேர்தலில் போட்டியிடுவோர் எண்ணிக்கை 62 பேராக குறைந்துள்ளது.
வேட்புமனுக்களை அதிகமானவர்கள் தாக்கல் செய்திருந்ததால் வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடைபெறுமா அல்லது வாக்கு இயந்திரம் மூலம் நடைபெறுமா என்ற குழப்ப நீடித்த நிலையில், 62 பேர்தான் தேர்தல் களத்தில் இருப்பதால் வாக்கு இயந்திரம் மூலமே தேர்தல் நடைபெறும் நிலை உருவாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதனால் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அங்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
வேட்புமனு தாக்கல்
இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கி 23ம் தேதியுடன் முடிந்தது. இதில், திமுக சார்பில் மருது கணேஷ், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரன், பாஜ சார்பில் கங்கை அமரன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா உள்ளிட்ட 127 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
நிராகரிப்பு
இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தலைமையில் நடைபெற்றது. அப்போது, சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் உட்பட 45 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுக வேட்பாளர் மருதுகணேஷ், மதுசூதனன், டிடிவி.தினகரன், தீபா உட்பட 82 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இன்று வாபஸ்
இந்த நிலையில், வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 8 சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். மேலும் 12 மாற்று வேட்பாளர்களும் வாபஸ் பெற்றனர். இதனையடுத்து, வேட்பாளர்களின் எண்ணிக்கை 62 ஆக குறைந்துள்ளது.
மின்னனு இயந்திரம்தான்
வேட்பாளர்களின் எண்ணிக்கை 62 ஆக குறைந்ததையடுத்து மின்னனு வாக்கு இயந்திரம் ஆர்.கே. நகர் தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ளது. ஒரு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்களின் சின்னம் என்ற அளவில் 4 மின்னனு இயந்திரங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பயன்படுத்தப்பட உள்ளன.
முக்கிய வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், அதிமுக சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரன், தேமுதிக சார்பில் மதிவாணன், பாஜ சார்பில் கங்கை அமரன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.