செல்ல நாயே கடித்தது- சென்னை மாணவர் ”ரேபிஸ்” நோயால் பலி
சென்னை:செல்லமாக கொஞ்சியபோது நாய்க்குட்டி கடித்ததில், 3 மாதம் கழித்து ரேபிஸ் நோய் தாக்கி கல்லூரி மாணவர் ஒருவர் இறந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் மைக்கேல் சாமுவேல். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி ஹெலனா.

ஓய்வு பெற்ற பேராசிரியை.
இவர்களுடைய மகன் ஆலன் ஜோயஷ் சாமுவேல். இவர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் முதுகலை சமூகநலன் பிரிவு படித்து வந்தார்.

கல்லூரியில் நாய் குட்டிகள்:
கடந்த நவம்பர் மாதம் ஆலன் ஜோயஷ் சாமுவேல் தனது சக கல்லூரி தோழி ஒருவருடன் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டு வந்தார். அப்போது கல்லூரி வளாகத்தினில் சுற்றிக்கொண்டு இருந்த 2 நாய்க்குட்டிகளை கண்டார். அந்த நாய்க்குட்டிகளின் அருகே சென்று சாப்பிட ஏதோ கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அதில் ஒரு நாய்க்குட்டி 2 பேரையும் கடித்தது. இதில் ஆலன் ஜோயஷ் சாமுவேலின் கையில் லேசான காயம் ஏற்பட்டது.

”ரேபிஸ்” வைரஸ் அறிகுறி:
உடனடியாக 2 பேரும் கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றனர். பின்னர் சாமுவேலின் தோழி மட்டும் நாய்க்கடி தொடர்பான முறையான சிகிச்சை பெற்றார். ஆனால் ஆலன் ஜோயஷ் சாமுவேல் இதனை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை.

கடுமையான காய்ச்சல்:
3 மாதம் சென்ற நிலையில், கடந்த புதன்கிழமை ஆலன் ஜோயஷ் சாமுவேலுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு "ரேபிஸ்"நோய் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உயிரிழந்த ஜோயஷ்:
ஆனால், சிகிச்சை பலனின்றி ஆலன் ஜோயஷ் சாமுவேல் பரிதாபமாக பலியானார்.ஆலன் ஜோயஷ் சாமுவேலின் உடல் நேற்று சென்னைக்கு கொண்டுவரப்பட்டு சூளையில் உள்ள புனித பால் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

முதுகலை படிப்பு:
இறந்த மாணவர் ஜோயஷ் கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு முடித்தவர். படித்துவிட்டு சென்னையில் உள்ள பிரபல கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தும் வந்தார்.

சமூக அக்கறை:
இருந்தாலும் சமூக அக்கறை மற்றும் படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினாலும் 2 மாதம் மட்டுமே வேலை பார்த்த ஜோயஷ், சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் முதுகலை சமூகநலன் பாடப்பிரிவில் சேர்ந்து படித்து வந்தார்.

தந்தை உருக்கம்:
ஆலன் ஜோயஷ் சாமுவேலின் தந்தை மைக்கேல் சாமுவேல் கூறியது, "சம்பவம் நடந்த அன்று தெருவில் கிடந்த அந்த நாய்க்குட்டி லேசாகத்தான் கடித்தது என்றும், பெரிதாக ஒன்றும் காயம் இல்லை என்றும் எனது மகன் கூறினான். நாங்களும் விபரீதம் தெரியாமல் இதை எளிதில் விட்டுவிட்டோம்.

விபரீதம் புரிந்தது:
ஆனால் கடந்த சில நாட்களாகவே தண்ணீரை கண்டு பயந்தான். அலறினான். அவனுடைய செயல்கள் விசித்திரமாக படவே உடனடியாக நாங்கள் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றோம். அங்கு அவனுக்கு ரேபிஸ் நோய் அறிகுறி இருப்பது தெரிந்ததுமே நாங்கள் நொறுங்கி விட்டோம். நாங்கள் அன்று எளிதாக நினைத்த காரியம், எனது மகனின் உயிரை பலிவாங்கி விட்டது. இதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை"என்று அவர் கண்ணீருடன் கூறினார்.

செல்லப்பிராணிகளின் நண்பன்:
ஆலன் ஜோயஷ் சாமுவேலின் உறவினர் ஒருவர் ,"ஆலன் ஜோயஷ் சாமுவேல் எந்த பிராணியை பார்த்தாலும் அதை பாசத்துடன் தடவி கொடுப்பான். அவனது வீட்டிலும் ஒரு நாயை வளர்த்து வந்தான். அதை தனது வீட்டில் உள்ள ஒரு உறவினர் போலவே பராமரித்து வந்தான்.

நாயைப் பிரிந்து அழுத ஆலன்:
அவனது அம்மா ஒருமுறை அந்த நாயை கூட்டிக்கொண்டு சென்றபோது, கீழே விழுந்துவிட்டார். அதன் பின்னர் அந்த நாயை வெளியூரில் உள்ள உறவினரிடம் கொடுத்து விட்டார்கள். அன்றைய தினம் அந்த நாயை நினைத்து அவன் அழுதது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனால் நாய் மூலமே அவன் இறந்துபோவான் என்பதை நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை"என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications