ராதாபுரத்தில் வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளரை விரட்டிய பெண்கள்
நெல்லை: பழவூர் அருகே வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளரை பெண்கள் முற்றுகையிட்டதால் அவர் பாதியில் ஓட்டம் பிடித்தார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி அதிமுக வேட்பாளராக முதலில் பணகுடி பேரூராட்சி தலைவர் லாரன்ஸ் அறிவிக்கப்பட்டார். சீ்ட்டு நடத்தி பொதுமக்கள் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு ஓடியதாக அவர் மீது கட்சியினர் தலைமைக்கு புகார் அனுப்பினர். இதையடுத்து அவர் மாற்றம் செய்யப்பட்டு புதிய வேட்பாளராக இன்பத்துரை அறிவிக்கப்பட்டார்.

நேற்று இரவு 8 மணி அளவில் அவர் தனது ஆதரவாளர்களுடன் பழவூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். யாக்கோபுரம், சிதம்பரபுரத்தை அடுத்த மறவன்குளத்திற்கு அவர் செல்லும்போது அப்பகுதி பெண்கள் சுமார் 50 பேர் அவரை சூழ்ந்து கொண்டனர்.
கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எங்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை. தற்போது தேர்தல் என்றதும் ஓட்டு கேட்டு மட்டும் வந்துள்ளீர்களே என ஆவேசமாக கேட்டனர். மேலும் நாங்கள் தேர்தலை புறக்கணிக்கிறோம். நீங்கள் ஓட்டு கேட்டு கிராமத்திற்குள் வர வேண்டாம் என காட்டமாக தெரிவித்தனர்.
வாக்குவாதம் செய்த பொதுமக்களை வள்ளியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் அழகானந்தம், ராதாபுரம் தொகுதி செயலாளர் பால்துரை ஆகியோர் சமாதானம் செய்தனர்.
பின்னர் இன்பத்துரை பேசுகையில், உங்கள் குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்தார். ஆனாலும் பெண்கள் கோபத்துடன் இருந்ததால் அவர் சிறுதி நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பல கிராமங்களில் இது போன்ற நிலை நீடிப்பதால் அதிமுக வேட்பாளர்கள் கதி கலங்கி போய் உள்ளனர்.












Click it and Unblock the Notifications