நடிகர் சங்க பொதுக்குழுவில் ஏற்பட்ட மோதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை - ராதாரவி
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற மோதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை நடிகர் ராதாரவி கூறியுள்ளார்
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67ஆவது பொதுக்குழுக் கூட்டம் தியாகராய நகரில் மதியம் 2 மணிக்குத் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கதவுகள் மூடப்பட்டது. உரிய அடையாள அட்டை இல்லாத பத்துக்கும் மேற்பட்டோர் பொதுக்குழு நடைபெறும் இடத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.
கூட்டம் நடைபெறும் இடத்துக்குள் அனுமதிக்கக் கோரியவர்களுக்கும், அதைத் தடுக்கச் சென்ற போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த மோதலில் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சங்கத்தின் அறக்கட்டளையிலும், நடிகர் சங்கத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோரை சங்கத்தில் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்கள்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சரத்குமார், ராதாரவி ஆகியோர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழுவில் எங்களை பங்கேற்ற அனு மதிக்கும்படி, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு உத்தரவிடவேண்டும் என்று சரத்குமார், ராதாரவி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு நடிகர் சங்கத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இவர்கள் இருவரையும் பொதுக்குழுவில் அனுமதிக்க முடியாது என்று கூறினார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தள்ளுமுள்ளு, மோதல் ஏற்பட்டது. நடிகர் கருணாஸ் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த மோதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications