அந்தத் தம்பிக்குத் தமிழ் படிக்கத் தெரியுமான்னு தெரியலை... விஷாலை வாரிய ராதிகா
சென்னை: நடிகர் விஷால் மீது சரத்குமார் அணியைச் சேர்ந்த நடிகை ராதிகா கடுமையாக பாய்ந்துள்ளார். விஷாலுக்குத் தமிழ் படிக்கத் தெரியுமா, தெரியாதான்னு தெரியலை என்று அவர் கூறியிருப்பது "மொழி வாரி" மோதல் நடிகர் சங்கத் தேர்தலில் உள்ளதை நிரூபிப்பதாக அமைந்துள்ளது.
நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணிக்கு எதிராக விஷாலை முன்னிறுத்தி ஒரு பிரிவு மோதி வருகிறது. அரசியல் தேர்தலை விட அனல் பறப்பதாக உள்ளது இந்த சங்கத் தேர்தல்.
விஷால் அணியினர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்ட நிலையில் மறுபக்கம் சரத்குமார் அணி மிக அமைதியாக, நிதானமாக பிரசாரம் செய்து வந்தது. சில நாட்களுக்கு முன்புதான் அவர்கள் செய்தியாளர்களையே சந்தித்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது சரத்குமார், ராதிகா உள்ளிட்டோர் பேசினார். ஆனால் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு யாருமே பதிலளிக்கவில்லை. இந்தக் கூட்டத்தின்போது ராதிகாவும் படு உஷ்ணமாக பேசினார்.
மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்
அவர் பேசுகையில், இந்த நேரத்தில் நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். முறைகேடு முறைகேடு என்று பேசுகிறார்கள். அதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர்கள் இப்படிக் கூறியதற்காக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.
விட மாட்டேன் அவர்களை
இந்தப் புகாருக்கு அவர்கள் மன்னிப்பு கேட்டாக வேண்டும். நான் சும்மா விட மாட்டேன். யார் தோற்றாலும் சரி, ஜெயித்தாலும் சரி. எனக்குக் கவலை இல்லை. ஆனால் இப்படிக் கூறியதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டாக வேண்டும்.
தம்பிக்குத் தமிழ் தெரியாது போல
அந்தத் தம்பிக்குத் தமிழ் படிக்கத் தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால் கூட இருக்கும் நாசருக்குத் தமிழ் தெரியுமே. அவர் சங்க ஒப்பந்தம் குறித்துப் படித்துப் பார்த்திருக்கலாமே. படித்துப் பார்த்து விட்டு முறைகேடா இல்லையா என்று பேசட்டும்.
எத்தனை பேரைப் பார்த்திருக்கிறேன்
நான் எத்தனையோ ஹீரோக்களுடன் நடித்திருக்கிறேன். அதில், சரத்குமார் போன்று மனிதாபிமானமிக்க ஒருவரை, மற்றவர்களுக்கு ஓடிஓடி உதவி செய்கிற ஒருவரை நான் பார்த்ததில்லை.
நாங்க எப்பவுமே அப்படித்தான்
ராதாரவி பேசிவிட்டார் என்று கூறுகிறார்கள். அவர் அப்படிப் பேசாமல் விட்டால்தான் பிரச்சினை. எங்க குடும்பமே அப்படித்தான். எங்க அப்பா பாட்டே பாடுவார். நாங்கள் வளர்ந்த விதம் அப்படி என்று கூறினார் ராதிகா.