கடும் காற்று... கொட்டும் மழை... திருச்சியில் குடையை மறுத்து நனைந்தபடியே பேசிய ராகுல்
திருச்சி: திருச்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, குடை வேண்டாம் என்று மறுத்து விட்டு, கொட்டும் மழையில் நனைந்தபடியே பேசினார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டு வருகிறார். அதன்படி, நேற்று தமிழகம் வந்த ராகுல்காந்தி, திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

ராகுல் வருவதற்கு முன்னதாகவே அப்பகுதியில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. ஆனால், மழையையும் பொருட்படுத்தாது ராகுலைப் பார்ப்பதற்காக தொண்டர்கள் வெள்ளமாக திரண்டிருந்தனர்.
மழையில் நனைந்தபடியே மேடை ஏறினார் ராகுல். தொண்டர்கள் மத்தியில் பேச மைக் முன் நின்ற ராகுலுக்கு, பாதுகாவலர் ஒருவர் குடை பிடிக்க முயன்றார். ஆனால், அதனை மறுத்து விட்ட ராகுல் கொட்டும் மழையில் நனைந்த படியே பேசினார்.
மழையோடு காற்றும் சேர்ந்து வீசியது. ஆனால், அதனை எல்லாம் பொருட்படுத்தாது தனது பேச்சில் மட்டுமே கவனம் செலுத்தினார் ராகுல்.
தனது உரையில், ‘தமிழகத்தில் உள்ள வேலையில்லாத் திண்டாட்டம் குறித்துப் பேசிய ராகுல், தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரைப் பற்றி புகழ்ந்து பேசினார். மேலும், ‘தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் புதிய மதுக்கொள்கை கொண்டு வரப்படும்' என அவர் தெரிவித்தார்.
மேடை ஏறியதும் தமிழில் வணக்கம் கூறி, குடை பிடிக்காமல் மழையில் நனைந்த படி பேசி என தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் ராகுல்.












Click it and Unblock the Notifications