ஹாய் ஹாய்.. ஸ்டாலின் பேரன், பேத்திகளுடன் உரையாடிய ராகுல் காந்தி !
சென்னை: கருணாநிதியின் வைரவிழாவில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி முன்னதாக ஸ்டாலின் வீட்டில் நடைபெற்ற தேநீர் விருந்தில் கலந்துகொண்டார்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதன் வைர விழாவும், அவரது 94வது பிறந்த நாள் விழாவும் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் பங்கேற்க பங்கேற்க காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தார். திமுக சார்பில் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. ஆகியோர் ராகுல் காந்தியை வரவேற்றனர்.
அதன் பின்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு ராகுல் காந்தி சென்றார். அவரை ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் ராகுல் காந்திக்கு ஸ்டாலின் தேனீர் விருந்து அளித்தார். அப்போது ஸ்டாலினின் பேரன், பேத்திகள், மகள், மருமகனுடன் சிறிது நேரம் உரையாடினார் ராகுல் காந்தி. ஸ்டாலின் மனைவி துர்காவிடமும் நலம் விசாரித்தார். ராகுல் காந்தி. இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் சட்டசபை தலைவர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் திமுக பத்தாண்டு காலம் இருந்த போதும், பலமுறை சென்னைக்கு வந்த ராகுல்காந்தி கோபாலபுரம் வீட்டிற்கோ, ஸ்டாலின் வீட்டிற்கு வந்ததில்லை. ஸ்டாலின் வீட்டிற்கு வந்து ராகுல்காந்தி தேநீர் விருந்தில் பங்கேற்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.