பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் ராகுல் 'புயல்'.. சென்னை கோபாலபுரத்தில் கரையை கடக்கும்?
சென்னை: தமிழக அரசியல் களத்தில் பலமான சந்திப்புகள் பரபரப்பாக அரங்கேறும் நிலையில் அண்மையில் பெரும் புயலாக உருவெடுத்து வரும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார். இந்த பயணத்தின் போது சென்னையில் அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தமிழக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் நடைபெறலாம் என்ற நிலையில் தே.மு.க. தலைவர் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரைத் தொடர்ந்து தம்பி தமிழரசுவின் மகன் திருமணத்தை முன்வைத்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அடுத்தடுத்து அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

அண்மைக்காலமாக தி.மு.க- காங்கிரஸ் கட்சிகளிடையே மிகுந்த நெருக்கம் இருப்பதாகவே கருதப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் மெகா கூட்டணி அமைக்க வேண்டிய நிலையில் இருக்கும் தி.மு.க., அனைத்து அரசியல் கட்சிகளையும் அரவணைத்துச் சென்றாக வேண்டிய நிலையில் அடுத்தடுத்து அடிகளை எடுத்து வைக்கின்றன. இதனால்தான் சத்தியமூர்த்தி பவன் வாசலை கனிமொழி மிதிக்க வேண்டிய நிலை.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி திருச்சிக்கு இம்மாத இறுதியில்ல் வருகை தர இருக்கிறார். அங்கு விவசாயிகளை சந்திக்கும் ராகுல் தென்மாவட்டம் ஒன்றில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.
ராகுல் காந்தியின் இந்த தமிழகம் வருகையின் போது தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவர் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி இருந்த போது காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருந்தது. ஆனால் ராகுல் காந்தியோ கருணாநிதி தமிழகம் வந்தாலும் கருணாநிதியை சந்திப்பதை தவிர்த்தே வந்தார்.
ஆனால் 56 நாட்கள் விடுமுறைக்குப் போய்விட்டு வந்த பின் தனது போக்கை மாற்றிக் கொண்டு அரசியலில் புதிய புயலாக புறப்பட்டிருக்கும் ராகுல் காந்தி கருணாநிதியை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றன தி.மு.க. வட்டாரங்கள்...












Click it and Unblock the Notifications