காவிரி .. மத்திய அரசைுக்கு எதிரான ரயில் மறியல் முழு வெற்றி - பி.ஆர். பாண்டியன் #cauvery
தஞ்சாவூர்: காவிரி பிரச்சனையில் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ரயில் மறியல் போராட்டம் முழு வெற்றியை பெற்றுள்ளது என்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
காவிரியில் இருந்து முறையாக தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகத்திற்கு ஆதரவாக நடந்து மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது. இதனை உடனடியாக மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதனைக் கண்டித்து தற்போது நடந்து வரும் போராட்டத்தின் இன்னொரு பகுதியாக, கர்நாடகத்திற்கு மின்சாரம் செல்லும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி அலுவலகம் முன்பு நாளை போராட்டம் நடத்தப்படும்.

தமிழக அரசைப் பொருத்தவரை உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழக விவசாயிகளின் சார்பாக மத்திய அரசிடம் உரிய முறையில் பேசி தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டும்.
காவிரி நதி நீர் பிரச்சனைக்காக தமிழக விவசாயிகளால் நடத்தப்படும் இந்தப் போராட்டத்திற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை எனில் மத்திய அரசு அலுவலகங்களை கைப்பற்றிவோம். அந்த அலுவலகங்கள் தமிழகத்தில் இயங்காதவாறு செய்வோம்.
தமிழக விவசாயிகளையும், மக்களையும் மதிக்காமல் வஞ்சகம் செய்து வரும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழகம் இருக்க வேண்டுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள டெல்டா பகுதிகளை ஆய்வு செய்வதற்காக அண்மையில் வந்து சென்ற மத்திய வல்லுநர் குழு நியாயமான அறிக்கையை தாக்கல் செய்யும் என்று நம்புகிறேன். ஏனென்றால் அவர்கள் தமிழகம் வந்து ஆய்வு செய்த போது டெல்டா பகுதிகள் முழுவதும் ஒரு பாலைவனம் போல் காட்சி அளித்ததைக் கண்டு அதிர்ந்து போனர்கள். எனவேதான் மத்திய வல்லுநர் குழு நியாயமான அறிக்கை அளிக்கும் என்று சொல்கிறேன். நிச்சயம் தமிழகத்திற்கு நீதி கிடைக்கும் என்று பி.ஆர். பாண்டியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications