575 கிமீ நீளும் தமிழக ரயில் பாதை.. சென்னை, தஞ்சை மக்கள் காத்திருந்த “அந்த” திட்டம்! கோவையன்ஸ் ஹேப்பி
சென்னை: தமிழ்நாட்டில் ரயில் பாதைகளை மேலும் 575 கிலோ மீட்டர்கள் நீட்டிக்க ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேவுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
தமிழ்நாட்டில் ரயில் சேவைகள் இல்லாத பகுதிகளுக்கும் ரயில் சேவைகளை கொண்டு செல்லும் வகையில் தெற்கு ரயில்வே பல்வேறு இடங்கள் சர்வே செய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மேலும் 575 கிலோ மீட்டர் நீளத்தில் ரயில் பாதைகளை நீட்டிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பரிந்துரை செய்தது.

இந்த நிலையில் தெற்கு ரயில்வேயின் பரிந்துரையை ஏற்று இருக்கும் ரயில்வே வாரியம், இதுதொடர்பாக தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கம் உட்பட 5 இடங்களில் சர்வே செய்து விரிவான திட்ட அறிக்கையை சமர்பிப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து இருக்கிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி குகநேசன் விரிவாக விளக்கி உள்ளார்.
அவர் தெரிவிக்கையில், "தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 31 கிலோ மீட்டர் ரயில் பாதை, அரக்கோணம் - ரேணிகுண்டா இடையே 68 கிலோ மீட்டர் ரயில் பாதை, தஞ்சாவூர் - திருவாரூர் இடையே 96 கிலோ மீட்டர் ரயில் பாதை, கோவை - சோரனூர் இடையே 99 கிலோ மீட்டர் ரயில் பாதை, ஜோலார்பேட்டை - கோவை இடையே 282 கிலோ மீட்டர் ரயில் பாதை என 5 பாதைகள் இரட்டை ரயில்வே வழித்தடங்கள் அமைக்க சர்வே செய்யப்பட்டு உள்ளது." என்றார்.
இதற்கு ஒப்புதல் தெரிவித்து உள்ள ரயில்வே வாரியம், கடந்த மே 4 ஆம் தேதி ரூ.11.52 கோடியை ஒதுக்கீடு செய்து இருக்கிறது. இந்த 5 வழித் தடங்களில் ரயில்வே பாதைகளை நீட்டிப்பதன் மூலமாக சரக்கு ரயில்களை பிரித்து, நெடுந்தூர ரயில்களை இயக்குவது சுலபமாகும். ஜோலார்பேட்டை - கோவை இடையிலான ரயில் தடம் சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் நெடுந்தூர ரயில் சேவை திட்டங்களுக்கு பயனளிக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கோவை - சோரனூர் ரயில் தடத்தில் மூன்று மற்றும் 4 வது பாதைகளை அமைப்பதன் மூலம் கேரளாவிலிருந்து மாநிலத்தின் தெற்கு பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க முடியும். இந்த 5 ரயில் தடங்களில் மக்கள் வெகுவாக எதிர்பார்த்தது தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான ரயில்வே பாதைதான். இதன் மூலம் சென்னை மாநகரை சார்ந்திருக்கும் பெரும்பாலான மக்கள் பயனடைவார்கள்.
நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த இந்த பணிகள் தற்போது தொடங்கப்படுவது ரயில் பயணிகளையும், அப்பகுதி மக்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டல பிரிவு, இந்த தடத்தில் 3 வது பாதையை அமைத்து முடித்துவிட்டது. இதன் மூலம் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு வரை ஏராளமான புறநகர் ரயில்களை இந்த ஆண்டு இறுதிக்குள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதே வழியில் 4 வது ரயில் பாதை அமைக்கும் திட்டம் மூலமாக தெற்கு புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எளிதில் சென்னைக்கு வந்து செல்ல முடியும்.












Click it and Unblock the Notifications