ஓடும் ரயிலில் பெண் கை துண்டான சம்பவம்: சாட்சி சொல்ல கூட முன்வராத சக பயணிகள்
மதுரை: ரயிலில் பயணித்தபோது, அறிவிப்பு பலகை விழுந்து பெண்மணி கை துண்டானது. இதுகுறித்து சாட்டியம் சொல்ல சக பயணிகள் யாருமே முன்வர மறுத்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த ரத்தினசாமி மகள் மகாலட்சுமி (22). இவர் கடந்த 9ம் தேதி சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லைக்கு சென்றார்.

விருதுநகர்- சத்திரப்பட்டி அருகே ரயில் வந்தபோது தண்டவாள வளைவில் இருந்த எச்சரிக்கை பலகை சாய்ந்து விழுந்தது. இதில் ஜன்னலுக்கு வெளியே தொங்க விட்டிருந்த மகாலட்சுமியின் வலது கை துண்டானது. இதனால் சக பயணிகள் பீதியடைந்து சத்தம் போட்டனர். ரயில் நிறுத்தப்பட்டு, மகாலட்சுமி மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைகக்காக சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மிட்டல் நேற்று சிறப்பு ரயிலில் வந்து விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தண்டவாளப் பகுதியில் விழுந்து கிடந்த எச்சரிக்கைப் பலகை கம்பத்தை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். இந்த ஆய்வின்போது பிற உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மகாலட்சுமியிடம் நேரில் சென்று ஆணையர் விசாரணை நடத்தினார். பின்னர் மதுரையிலுள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள அரங்கில் விசாரணை நடந்தது.
ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே துறையில் ஸ்டேஷன் மாஸ்டர்கள், ரயில்வே தளவாடப்பொருட்கள் பராமரிப்பு பிரிவு, பொறியாளர் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். மேலும், அனந்தபுரி ரயிலில் பயணித்த பயணிகள் சிலருக்கும் விசாரணையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், யாரும் விசாரணைக்கு வரவில்லை. எனக்கென்ன வந்தது என்று அவரவர்கள் வேலையை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications