தண்டவாளத்தில் சிக்கியவரை காப்பாற்றிய ரயில்வே போலீஸ்க்கு அண்ணா பதக்கம்!
குடியரசு தினத்தை முன்னிட்டு வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
நாட்டின் 69வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னை காந்திசிலை அருகே தேசிய கொடியை ஏற்றினார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற முப்படை அணிவகுப்புகளை அவர் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதக்கங்களை வழங்கினார். வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் சண்முகத்து வழங்கப்பட்டது.
ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே சிக்கியிருந்தவரை காப்பாற்றியதற்காக சண்முகத்துக்கு அண்ணாபதக்கம் வழங்கப்பட்டது. ஒரு லட்சம் ரூபாய் காசோலை மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கத்தை முதல்வர் வழங்கினார்.
காந்தியடிகள் காவலர் பதக்கம் 5 போலீசாருக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.
வேளாண் விருது விவசாயி முனுசாமிக்கு வழங்கப்பட்டது. திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பம் மூலம் அதிக உற்பத்தி பெறுவதற்காக தருமபுரி மாவட்டம் குள்ளனூரைச் சேர்ந்த விவசாயி முனுசாமிக்கு 5 லட்சம் ரூபாய் காசோலையுடன் பதக்கத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.