பொறுப்பற்ற ரயில்வே நிர்வாகம்.. லீவில் போன ஸ்டேஷன் மாஸ்டர்.. ஓசியில் போன பயணிகள்
திருச்சி: திருச்சி அருகே கடந்த 10 நாட்களாக ஓய்வே இல்லாமல் பணியாற்றி வந்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர், மாற்றுப் பணிக்கு ஆளை அனுப்பக் கோரியும் அதை ரயில்வே நிர்வாகம் கண்டு கொள்ளாததால் கோபத்தில் விடுப்பில் போய் விட்டார். இதனால் அவர் வேலை பார்த்து வந்த ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணித்தனர்.
அதை விட முக்கியமாக அந்தப் பாதையில் வந்து சென்ற 7 ரயில்கள் மற்றும் அதில் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குள்ளானது.
திருச்சியில் இருந்து தஞ்சை செல்லும் மார்க்கத்தில் திருவெறும்பூர் அருகே மஞ்சத்திடல் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்வது வழக்கம்.
மஞ்சத்திடல் நிலைய அதிகாரியாக பசுபதி (45), அமல்ராஜ் (57) ஆகிய இருவர் பணியாற்றுகின்றனர். பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவது, ரெயில்களுக்கு சிக்னல் காண்பிப்பது உட்பட ரயில் நிலைய பொறுப்பு முழுவதும் இவர்கள் வசம் இருக்கும்.
இவர்கள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் என தொடர்ந்து பணியில் இருப்பார்கள். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அமல்ராஜ் நெஞ்சுவலி ஏற்பட்டதால் விடுமுறை எடுத்துள்ளார்.
அவருக்கு பதிலாக ரயில்வே நிர்வாகம் யாரையும் பணிக்கு அனுப்பவில்லை. இதனால் கடந்த 10 நாட்களாக பசுபதி காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை பார்த்துள்ளார். கூடுதலாக ஒரு நிலைய அதிகாரியை அனுப்பும்படி பசுபதி கேட்டும் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
இதற்கிடையே நேற்று இரவு 10 மணிக்கு பிறகு பணி முடிந்ததும் ரயில் நிலையத்தை பூட்டி விட்டு பசுபதி சென்றுவிட்டார். தொடர்ந்து 10 நாட்களாக இடைவிடாது வேலை செய்ததால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் இன்று காலை அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை.
தினமும் காலை 6.20 மணிக்கு மஞ்சத்திடல் ரயில் நிலையத்திற்கு திருச்சி- காரைக்கால் பயணிகள் ரயில் வரும். இதற்காக காலை 6 மணிக்கே பயணிகள் மஞ்சத்திடல் நிலையத்திற்கு வந்து விடுவார்கள். இன்று காலை ரயில் நிலையம் வந்த பயணிகள் நிலையம் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதற்குள் 6.20 மணிக்கு வரும் பயணிகள் ரயில் வந்ததால் டிக்கெட் எடுக்காமலே பயணிகள் ஏறி சென்றனர்.
தொடர்ந்து 6.40 மணிக்கு தஞ்சை-திருச்சி, 7.20 மணிக்கு திருச்சி-மயிலாடுதுறை, 8.30 மணிக்கு திருச்சி-மயிலாடுதுறை, 8.46 மணிக்கு மன்னார்குடி-மானாமதுரை, 9 மணிக்கு மயிலாடுதுறை-திருச்சி பயணிகள் ரயிலும், 8.05 மணிக்கு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ஆகிய 7 ரயில்கள் அந்த நிலையம் வழியாக கடந்து சென்றன.
இதில் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் தவிர பிற ரயில்கள் அனைத்தும் மஞ்சத்திடல் ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி சென்றன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் டிக்கெட் இன்றி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது.
இதன் பின்னர் காலை 9.30 மணிக்கு ஜான்சன் என்பவரை ரயில்வே நிர்வாகம் மஞ்சத்திடல் ரெயில் நிலைய பணிக்கு அனுப்பி வைத்தது.
பல மணி நேரமாக ஒரு ரயில் நிலையத்தில் மாஸ்டர் இல்லை என்பதையோ, டிக்கெட் கொடுக்க ஆள் இல்லை என்பதையோ, பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானது குறித்தோ ரயில்வே நிர்வாகம் எப்படி கண்டுகொள்ளாமல் இருந்தது என்று மக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்












Click it and Unblock the Notifications