சென்னையில் வெயிலோடு கொட்டிய மழை... காக்காவுக்கும் நரிக்கும் கல்யாணமா?
சென்னையில் வெயிலடித்துக்கொண்டே பலத்த மழை கொட்டியது.
சென்னை: சென்னையில் அதிகாலையில் மழை கொட்டியது. அரைமணிநேரத்திற்குப் பின்னர் மழை நின்றது, சூரியன் தலை காட்டியது. பிற்பகலில் வெயிலோடு பலத்த மழை கொட்டியது.
வடகிழக்குப் பருவமழை அவ்வப்போது கொட்டிவிட்டு செல்வதால் குடையில்லாமல் வெளியே கிளம்ப முடியவில்லை. வானிலை ஆய்வுமையம் தொடங்கி, வெதர்மேன் வரை குடையில்லாமல் வெளியே கிளம்ப வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
அதேபோல காலையிலேயே ஃபேஸ்புக் எச்சரிக்கிறது. மழையில் நனைந்து விடாதீர்கள். அதேபோலவே வெயிலை நம்பி வெளியே இறங்கியவர்கள் நனைந்துதான் போனார்கள்.
வெயில் அடித்துக்கொண்டே பெய்யும் மழை நனைவதற்கு சற்று இதமாகவே இருக்கிறது. இப்படி வெயிலடித்துக்கொண்டே மழை பெய்தால் கிராமங்களில் காக்காவுக்கும் நரிக்கும் கல்யாணம் நடக்கும் என்று கூறுவார்கள்.
இந்த காக்கா, நரி கல்யாணம் எப்படி நடக்கிறது... அதில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று ஒரு பாடலே உள்ளது. படிங்க... மழையோடு ரசிங்க மக்களே
மண்புழுவே மண்புழுவே
மெத்தையுடலால்
எங்கு நீயும் செல்கிறாய்
காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம்
கலந்துகொள்ளப் போகிறேன்
வெட்டுக்கிளியே வெட்டுக்கிளியே
வெடுக்கென்று செல்வதெங்கே நீ
தாவித் தாவி
காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம்
கலந்துகொள்ளப் போகிறேன்
தேரையே தேரையே செல்வதெங்கே நீயும்
தத்தித் தத்தி
காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம்
கலந்துகொள்ளப் போகிறேன்
பூனையே பூனையே கண்சுருக்கிப்
போவதெங்கே நீயும்
பம்மிப் பம்மி
காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம்
கலந்துகொள்ளப் போகிறேன்
பாம்பே பாம்பே சரசரத்துச்
செல்வதெங்கே நீயும்
வளைந்து நெளிந்து
காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம்
கலந்துகொள்ளப் போகிறேன்
புளிய மரமே புளிய மரமே
தலைவிரித்து ஆடுவதேன்
நிலைகொள்ளாமல் புரண்டு புரண்டு
காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம்
செல்ல முடியாமல் தவிக்கிறேன்
காகமே காகமேஅரக்கப் பரக்கச்
செல்வதெங்கே நீயும் பறந்து பறந்து
எனக்கும் நரிக்கும் கல்யாணம்
மை பூசும் நேரத்தில் கண்ணயர்ந்துபோனதால்
கடைசி ஆளாய்ப் போகிறேன்
கேள்விக்கு நேரமில்லை
போகிறேன் நான் பறந்து பறந்து
முடிந்தால் நீயும் வா நடந்து நடந்து