வெளுத்தெடுக்கும் மழை.. வேகமாக நிரம்பி வரும் நெல்லை மாவட்ட அணைகள்
நெல்லை: தென் மேற்கு பருவமழை தொடங்கி வேகமெடுத்துள்ளதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை வெளுத்து வருகிறது. அதேபோல நெல்லை, தூத்துககுடி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

கோடை காலத்தில் கடும் வறட்சி காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் குறைவாக இருந்தது. இதனால் ஜூன் 1ம் தேதி அணையில் இருந்து நீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 76.50 அடியாக உயர்ந்துள்ளது. அணைப்பகுதியில் 96 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 73.10 அடியாக உள்ளது. அணைப்பகுதியில் 34 மிமீ மழை பதிவாகியுள்ளது. குண்டாறு அணையின் நீர்மட்டம் 22.13 அடிகாய உயர்ந்துள்ளது. இருப்பினும் அணை மூடப்பட்டுள்ளது. அணைப்பகுதியில் 64 மிமீ மழை பதிவாகியுள்ளது.
பிற அணைகளை பொறுத்தவரை கடனா நதியில் 25, ராமநதியில் 16, கருப்பாநதியில் 12, கொடுமுடியாறு அணையில் 17, அடவி நயினார் அணையில் 51 மிமீ மழை பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரையல் அம்பையில் 8.9, ஆய்க்குடியில் 30.5, சேரன்மகாதேவியில் 4.4, நான்குநேரியில் 8, ராதாபுரத்தில் 4.2, சங்கரன்கோவிலில் 7, செங்கோட்டையில் 31, தென்காசி 23.9, நெல்லையில் 4 மிமீ மழை பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் கார் பருவ நெல் சாகுபடிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications