மேலும் 24 மணி நேரத்திற்கு கன மழையை எதிர்பார்க்கலாமாம்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வட கிழக்குப் பருவ மழை சூடுபிடித்துள்ளது. இந்த முறை முன்கூட்டியே தொடங்கி விடாமல் வெளுத்து வாங்கியதால் வழக்கத்தை விட கூடுதலான மழைப் பொழிவை முதல் ரவுண்டிலேயே தமிழகம் சந்தித்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி கடல் பகுதியிலும் தென் தமிழகத்தின் கீழ் பகுதியிலும் ஏற்பட்டுள்ள வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சியால் மழை நீடித்து வருகிறது.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அநேக இடங்களில் மழை பெய்யும். உள்புற பகுதியில் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.
சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.