வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை... தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தெற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை நிலை கொண்டுள்ளதால், தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் இன்னும் இரு தினங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கத்தை விட இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இம்மாதம் 1 மற்றும் 2ம் தேதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக் காடாக மாறின.
இன்னும் சில தினங்களில் வடகிழக்குப் பருவமழை முடிய உள்ளது. இந்நிலையில், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், "தென்கிழக்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் தென் வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
வரும் 48 மணி நேரத்தைப் பொருத்தவரை, தென் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புண்டு. மேலும் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புண்டு" என்றனர்.