ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்தம்: தமிழகத்தில் 24 மணிநேரத்துக்கு மழை- பின் படிப்படியாக குறையும்
சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தம் ஆந்திரா நோக்கி நகருவதாகவும் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்துக்கு மழை நீடித்து பின்னர் படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.
வடகிழக்குப் பருவ மழை காரணமாக தமிழகத்தில் கடந்த வாரம் முதல் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியிருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆந்திராவுக்கு நகர்வதால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
கடல் கொந்தளிப்பு
சென்னை, வேலூர், காஞ்சிபுரம் பகுதிகளில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், அடுத்த தகவல் வரும் வரையில், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் .
அதிகமான மழை
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே, இப்பருவமழை காலத்தில் இயல்பைவிட அதிகமாக மழை கிடைக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரமணன் கடந்த 2004 முதல் 2011-ம் ஆண்டு வரை தமிழகத்தில் மழைப் பொழிவு இயல்பை விட அதிகமாகவே இருந்தது. 2005ம் ஆண்டில், 79 சதவீதம் மழை அதிகரித்து இருந்தது. 2012-ல் 16 சதவீதம், 13-ல் 33 சதவீதம் கடந்த ஆண்டில் 2 சதவீதம் பற்றாக்குறையாக மழை பெய்தது.
மழை குறைய வாய்ப்பு
இந்த ஆண்டில் தற்போது வரை 34 செ.மீ. மழை கிடைத்துள்ளது. வரும் நாட்களில் உருவாகும் நிகழ்வுகள் மூலம் மழை அதிகரிக்கும்.
எனினும், தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்றும், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறவோ, தீவிரம் அடையவோ வாய்ப்பில்லை.
இவ்வாறு ரமணன் கூறினார்.