வடகிழக்கு பருவமழை முடிவடைந்தும் தமிழ்நாட்டில் தொடரும் மழை!
சென்னை: வட கிழக்கு பருவ மழையின் முடிவிக்கு வந்துள்ள நேரத்தில் தமிழகத்தில் சராசரியாக 43 செ.மீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் புத்தாண்டான இன்றும் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.
அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவ மழை டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலத்தின் போது சராசரியாக 44 செ.மீ .மழை பெய்யும். இந்த ஆண்டு சராசரியாக 43 செ.மீ மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையின் போது திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சராசரி அளவுக்கு அதிகமாக பெய்துள்ளது.
மற்ற மாவட்டங்களில் இயல்பான மழை அளவு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில்101.6 செ.மீ. மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரியில் 28.94 செ.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று சென்னை, திருச்சி உள்ளிட்ட சில இடங்களில் மழை பெய்துள்ளது. மேலும், பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகின்றது.