சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை... மக்கள் ஹேப்பி அண்ணாச்சி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில் நெல்லையில் மழை, குன்னூரில் மழை, திருச்சியில் மழை, சேலத்தில் மழை என்ற செய்தியை கேட்ட சென்னைவாசிகள் இங்கு மழை பெய்யாத என ஏக்கத்துடன் இருந்தனர்.
இந்நிலையில் இந்த மாத முதல் வாரத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு வெப்பசலனம் காரணமாக கன மழை பெய்தது. இதையடுத்து மழை சற்று ஓய்ந்திருந்தது.
ஒரு சில நாட்களில் வெயில் அதிகமாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இன்று இரவு 7 மணியளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து கட்டியது.
தேனாம்பேட்டை, வில்லிவாக்கம், வளசரவாக்கம், சூளைமேடு, ராயபுரம், முகப்பேர், அண்ணாநகர், அரும்பாக்கம், போரூர், கோடம்பாக்கம், வடபழனி, கிண்டி, குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.