தமிழகத்தில் மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு! கடலூர் மாவட்டத்தில் 28 பேர்!!
சென்னை: தமிழகத்தில் மழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன் தென்மேற்கு வங்க கடலில் புதுச்சேரி அருகே உருவான காற்றழுத்த தாழ்வுநிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இதனால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழையும் பயங்கர காற்றும் வீசியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் புதுச்சேரி அருகே கரையை கடந்தது.
இதனிடையே கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெரியகாட்டுப்பாளையம் அருந்ததிநகர் ஓடையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற மழை தொடர்பான சம்பவங்களால் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் தமிழகத்தின் பிற பகுதிகளில் மழையினால் சுவர் இடிந்து விழுந்தும், மரம் முறிந்து விழுந்தும் ஒரே நாளில் 14 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்தது.