நெல்லையில் திடீர் மழை: அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு
நெல்லை: நெல்லையில் திடீரென பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கோடை வெயில் போன்று காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. வழக்கம்போல் காலை வெயில் நிலவிய போதிலும் மாலை சூழல் திடீரென மாறியது. வானம் கருத்து காணப்பட்ட நிலையில் 6 மணி அளவில் அவை பலத்த இடி மின்னலாக மாறியதுடன் மழையும் கொட்டியது.

நெல்லை மாநகர பகுதிகளில் நெல்லை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, சமாதானபுரம், பாளையங்கோட்டை, புதிய பேருந்து நிலையம், நெல்லை டவுன், மேலப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் எல்லாம் மழை நீர் தேங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 78.60 அடியாக இருந்த நிலையில் மழையின் காரணமாக அது வேகமாக உயர்ந்து வருகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 82.94 அடியிலிருந்து 84.94 அடியாக உயர்ந்துள்ளது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 55.28 அடியாக உள்ளது. நம்பியாறு அணையின் நீர்மட்டம் 8.63 அடியாக உள்ளது. கடனாநதியில் 4மிமீ, ராமநதியில் 7மிமீ, கருப்பாநதியில் 9.5 மி்மீ, குண்டாறில் 2 மிமீ, வடக்கு பச்சையாறு அணையில் 28.2மிமீ, நம்பியாறில் 58 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications